Saturday, January 14, 2012

சச்சின் ராமாயணம்!



ஹிஹி. நீங்க நினைக்கிற மாதிரி இல்லே. இது ராமாயணம் மற்றும் சச்சின் ஆகிய இரண்டு தலைப்பில் நான் போட்ட ட்வீட்டுகளின் தொகுப்பே. இந்த ஆண்டு கணக்கை இப்படிதான் துவக்க வேண்டியிருக்கு. ஆன்மீகவாதிகளும், சச்சின் பக்தர்களும் டென்சனாகாமல் படித்து, மறந்துவிட வேண்டுகிறேன். நன்றி.


***

கும்பகர்ணனை எழுப்புவதற்கு ஆட்கள் தேவை. Use #WakeKumbarnan tag. Pls RT #140inRamayan

#Sachin100 Real god already done with 9 of 10 avatars. Cricket god is 99 of 100.

. @Kumbakarnan உங்க பேர் பெருசா இருக்கு. டிவிட்டருக்காக சுருக்கி @KKarnan வச்சிக்கலாம். ஒகே? #140inRamayan

தல அமெரிக்கா வந்தா எங்கே ஷாப்பிங் பண்ணுவாரு? வேறெங்கே. 99 சென்ட் கடையில்தான். #Sachin100

வாலி ரொம்ப மோசமானவன். வேணும்னா அவனோட activity பக்கத்தை பாரு, ராமா. By சுக்ரீவன். #140inRamayan

சார், உங்க தொலைபேசி எண் என்ன? எழுதிக்குங்க. 99... அவ்வளவுதான். #Sachin100

லக்ஷ்மணன் மயங்கிட்டாரு. உடனடியா மூலிகைகள் தேவை. சஞ்சீவி மலை பக்கத்தில் யாராவது இருக்கீங்களா? Pls RT #140inRamayan

என்ன 80தானா? காலையில் அடிச்ச 20? சார், அது நெட் ப்ராக்டீஸ்லே அடிச்சது. கணக்கில் வராது. #Sachin100

குகனோடு ஐவரானோம். குகா, உன்னை @ராமசகோதரர்கள் லிஸ்ட்லே சேர்த்துட்டேன்

என் பார்ட்னர் ரன் அடிச்சதுக்கெல்லாம் மூச்சிரைக்க ஓடினேனே. அதையும் என் கணக்கில் சேர்க்கக்கூடாதா? #Sachin100

ராமா, உனக்கு ரெண்டு பசங்க பொறந்திருக்காங்க. ச்சே. @ஒருபொண்ணைபெத்தவங்க லிஸ்ட்லே சேரமுடியாதா? #140inRamayan

அடச்சே. நான் book கிரிக்கெட் ஆடினாலும், 80 தாண்ட மாட்டேங்குது. ஏன்னு தெரியல. #Sachin100

ராமர் பெருமைகளை பேசுபவர்கள் #WhyRamaIsGod tagஐ பயன்படுத்தவும். #140inRamayan

போன மேட்சுலே 40௦ நாட் அவுட். இந்த மேட்சுலே 60 அவுட். மொத்தம் நூறு வருதில்லே. இதை கணக்குலே சேத்துக்குங்க. #Sachin100

வாலி, சுக்ரீவன் உங்க ரெண்டு பேர் DPயும் ஒரே மாதிரி இருக்கு. யாராவது ஒருத்தர் மாத்துங்கப்பா. #140inRamayan

உலக நாயகன் கொடுக்கற பேட்டியே ஒழுங்கா புரிஞ்சிடும் போலிருக்கு. #Sachin100

அண்ணா, ராவணன் அண்ணிய திடீர்னு follow பண்றாரு. அவங்க ட்வீட்களை fav பண்றாரு. ஜாக்கிரதை. #140inRamayan

நானே குடும்பத் தலைவன் ஆயிடுவேன் போலிருக்கு. #Sachin100

விபீஷணன் டு ராவணன் : மன்னிச்சிடுங்க அண்ணா. unfollowing you. #RamaRocks #WhyRamaisGod #140inRamayan

மருதநாயகமே ரிலீசாயிடும் போலிருக்கு. #Sachin100

லக்ஷ்மணன் : இந்த கொடுமையை கேளுங்க. similar to youவில் ராவணனை காட்டுது ட்விட்டர். WTK? #140inRamayan

மமோசி'கூட வாயை திறந்து பேசிடப் போறாரு. #Sachin100

***



Read more...

Wednesday, December 28, 2011

கடைசியில் என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்க!



பலமான டிஸ்கி & எச்சரிக்கை:


சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு தகராறைக் குறித்து எழுதும் சுயவிளக்கப் பதிவு இது. சிரிப்பதற்கு விஷயம் ஒண்ணும் இருக்காது. இதை படிக்கலேன்னாலும் ஒண்ணும் ஆயிடாது. நல்ல மூடில் இருக்கிறவங்க, நல்ல பதிவு எதிர்பார்த்து வந்தவங்க நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. தயவு செய்து இந்த பதிவை படிக்காமல் மூடிவிடவும். நன்றி.


இந்த மாதிரி இன்னொரு பதிவும் வராது. அதனால் பயந்து 'unfollow' செய்துடாதீங்க.


***


ஒரு நண்பர் ஒரு நாள் டிவிட்டரில் யாரையோ திட்டிக்கிட்டே இருந்தாரு. திட்டினார்னா பத்து நிமிஷம், இருபது நிமிஷம் இல்லே - நாள் முழுக்க பல ட்வீட்கள் போட்டு திட்டிக்கிட்டே இருந்தாரு. இந்த திட்டல் எதுக்கு / யாருக்குன்னு யாருக்கும் தெரியாததால், TLல் இருந்த பலர் அந்த திட்டுகளை RT செய்தும், அவரை ஏற்றி விட்டுக் கொண்டும் இருந்தனர். நானும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்த திட்டுகள் அனைத்தும் எனக்குதான் விழுந்ததுன்னு மாலையில் புரிந்தது.

சரிதான், மனுஷனை இவ்வளவு டென்சன் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அவரை டிவிட்டரில் ப்ளாக் / அன்பாலோ செய்துவிட்டேன். அதோடு பிரச்னை தீர்ந்ததென்று நினைத்தேன். அது எவ்வளவு தப்புன்னு பிறகு புரிந்தது.

என்ன தப்புன்னு யோசிக்கிறீங்களா - அவர் நாள் முழுக்க என்னை திட்டியது தப்பில்லையாம். அதை நான் பப்ளிக்கா சொல்லிட்டு, அவரை ப்ளாக் செய்ததுதான் தப்பாம். அதாவது அந்த திட்டுகளை நான் கண்டுக்காமே இருந்திருக்கணுமாம். இப்போ நான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவரை அனைவரும் கேள்வி கேக்குறாங்களாம். அது அவருக்கு கஷ்டமா இருக்காம். சாமி, முடியல என்னாலே.

இருங்க. இன்னும் முடியல(!). இன்னொரு நண்பர் இது விஷயமா பஞ்சாயத்து செய்ய வந்தபோது சொன்னது - உங்களை திட்டிட்டோமேன்னு அவர் ரொம்ப வருத்தப்படறாரு. என்ன பண்றதுன்னு தெரியல.

எப்படி எப்படி? திட்டறது என்னை. வருத்தப்படறது அடுத்தவன்கிட்டேயா? நல்லா இருக்குல்லே நியாயம்? இத கேட்டா இன்னும் கதை வளருது.

உங்ககிட்டே மன்னிப்பு கேட்க வந்தா, நீங்க டக்குன்னு மூஞ்சி திருப்பிக்கிட்டு போயிடறீங்களாம். அப்புறம் அவரால் எப்படி பேச முடியும்?. இந்த இடத்தில் நிஜமாவே என்னால் முடியல. பாஸ். இந்த நடிப்பையெல்லாம் நாங்க தங்கப்ப-தக்கம் படத்திலேயே பாத்துட்டோம். தொலைபேசி, கைப்பேசி, மின்னஞ்சல் - இதிலெல்லாம்கூட பேசலாம்னு தெரியுமா? தெரியாதா?.

இப்படி கோபமாவே இருந்தா, உலகத்தில் நட்பு எப்படி மலரும்? அமைதி எப்படி பூக்கும்?. நீங்கதான் விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து போகணும். - இந்த அறிவுரை எனக்கு.

யப்பா சாமி. நாள் முழுக்க திட்டு வாங்கினவன் நான். அதுக்கு பிறகு எல்லா தப்பும் என் மேலேதானா?. சரி. ஒரே ஒரு தீர்வுதான் இதுக்கு.

தினமும் காலையில் எழுந்து என் தலையை தடவி பாத்துக்கறேன். என்னிக்கு என் தலையில் வடியறது ரத்தம் கிடையாது - தக்காளி சட்னின்னு தோணுதோ, அன்னிக்கு நானே வந்து 'திட்டு வாங்கினதுக்கு' மன்னிப்பு கேட்குறேன்.

எப்பூடி?

***

பல மாதங்களாக draftல் இருந்த பதிவை போட்டாச்சு. நிம்மதி ஆச்சு. இனி அடுத்த பதிவு புது வருடத்தில்.

அனைவருக்கும் இனிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2012.

***



Read more...

Saturday, December 24, 2011

சென்னை பள்ளிகள் - பாகம் 1

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் வந்துட்டா எங்க ப்ராஜெக்ட் நீட்டிக்கப்படும். அப்படி நீட்டிக்கப்படுவதில் ஒன்றும் பிரச்னை/சந்தேகம் இல்லையென்றாலும் ஒரு திக்திக்தான். ஆனா, அதே சமயத்தில் இன்னொரு கேள்வியும் வந்து நிற்கும். ஒரு சில வாரங்கள் விவாதங்களுக்குப் பிறகு, அடுத்த ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்படும். அது என்ன கேள்வி?



"போதும் இந்த நாடு. நம்ம ஊருக்கே போயிடலாமா?". பின்னணியில் பாட்டு ஒலிக்கும் - 'சொர்க்கமே என்றாலும்.. அது நம்மூரைப் போல வருமா?"


நான் பெங்களூர், ஹைதை, குர்காவ்ன், நொய்டா இப்படி எல்லா ஊரிலிருந்தும் relocate செய்திருக்கேன். ஆனா அப்போல்லாம் நிலைமை வேறு. இப்ப மிக முக்கியமான பாயிண்ட் - சஹானாவின் பள்ளி. சரியா அவங்க சொல்ற நேரத்தில் போய் அப்ளிகேஷன் வாங்கணும். ஒரு நுழைவுத் தேர்வு. அப்புறம்தான் பள்ளியில் சேர்க்கை. கொடுமை என்னன்னா, இதெல்லாம் தொடர்ச்சியா நடக்கற விஷயங்களும் இல்லை. சில பள்ளிகளில் அப்ளிகேஷனுக்கும், பள்ளியில் சேர்க்கைக்கும் நடுவில் ஆறு மாத காலங்களும் ஆகும். அதுக்காக, இந்தியா போயிட்டு வந்து, திரும்ப பள்ளி துவங்கும்போது போகணும். இப்படியெல்லாம் நிறைய மக்கள் செய்திருக்காங்க. (இணையத்தில் தேடும்போது தெரிந்தது). அடங்கப்பா, நாமும் இதேதான் செய்வோமா என்று எண்ணி, ஆராய்ச்சியை துவக்கினோம். நிறைய ஆட்களிடமும் ஆலோசனை கேட்டோம். அவர்களின் கருத்துகளும், பள்ளிகளின் அராஜகங்களும் பகீர் ரகம்.


நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். இங்கு அமெரிக்காவில் அரசு பள்ளிகளில் - அந்தந்த ஏரியாவில் இருப்பவர்களை அந்தந்த பள்ளிகள் கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளிலும் அவ்வளவு தள்ளுமுள்ளு இருக்காது. (தனியாரில் காசுதான் மிகமிக அதிகம்).


ஊருக்கு வர்றோம். பக்கத்தில் எந்த பள்ளி இப்போ நல்லாயிருக்குன்னு கேட்டா, ஒரே குரலில் அனைவரும் சொல்வது - அமெரிக்காவிலிருந்து வர்றே. நீ சாதாரண பள்ளியிலெல்லாம் சேர்க்கக் கூடாது. பத்மாசேஷாத்ரி / DAV இந்த மாதிரி இடத்தில்தான் சேர்க்கணும்.


ஏன்யா, அமெரிக்காவிலிருந்து வந்தா பெரிய கொம்பா? அதுக்காக, பெரிய பள்ளியில்தான் சேர்க்கனுமா? ஏன், லோக்கல் பள்ளியில் படித்தால் படித்தா படிப்பு வராதா? அல்லது அங்கே படிக்கறவங்க நல்லா படிக்கலியா? ஏன், இப்படி கொலவெறியோட சுத்தறீங்கன்னு கேட்டா, அதுக்கு பல்வேறு காரணங்களை அடுக்குறாங்க.


அமெரிக்கா வரும்போது நான் lower-middleclassதான். ஆறு வருடத்தில் சிவாஜி ரஜினி மாதிரியெல்லாம் அப்படி சம்பாதித்து விட முடியாதுடான்னா எவன் கேக்கறான்? சரி விட்டுத்தள்ளுங்க. பெரிய பள்ளிகளுக்கான பாயிண்ட்கள் இவைதான்.


நமக்கு சென்னை. நங்கநல்லூர்.


வீட்டு பக்கத்திலேயே (சின்னமலையில்) PSBB Millenium இருக்குன்னு சொல்லி ஒரு கிலி ஏத்தினாரு. பிறகு இணையத்தில் தேடித் பார்த்தால் - அந்த இடத்தில் இரண்டாம் வகுப்பு வரை மட்டும்தான். மூன்றாம் வகுப்புக்கு போரூர் போகணும். அது ரொம்ப தூரம்னு தெரிஞ்சுது. (சஹானா மூன்றாம் வகுப்பு சேரணும்.) நல்ல வேளைன்னு நினைச்சிக்கிட்டேன்.


ஆனா, அப்படியும் அடங்காமே திரியற மக்கள் நம்ம மக்கள்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. என்னடான்னா, நங்கநல்லூரில் இருக்கற ஒரு பய, PSBB போரூரில் பையனை சேர்க்கணும்னு, சொந்த வீட்டையே வித்துட்டு, போரூர்லே வீடு வாங்கி பள்ளிக்குப் பக்கத்தில் போயிட்டானாம். அடப்பாவிகளா, எங்கே என் வீட்டையும் வித்துடுன்னு சொல்வாங்களோன்னு நினைச்சேன். இதுவரை அப்படி யாரும் கேட்கலை.



அடுத்து இன்னொருத்தர். உறவினர்தான். அவர் மாதச் சம்பளம் ரூ.இருபதாயிரம். அவர் தன் பையனை ஆதம்பாக்கம் DMVயில் சேர்த்திருக்கிறாராம். அங்கே வருடத்திற்கு ரூ.நாற்பதாயிரம் கட்டணமாம். இதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லே. பள்ளிக்கே தன் இரண்டு மாத சம்பளத்தை கொடுத்துட்டா, அப்புறம் மத்ததெல்லாம் எப்படி நடக்கும்? கேட்டா, நல்ல கல்வி. பையன் வருங்காலம் நல்லா இருக்க வேணாமா?. அவர் முடிவை மாத்தறது நம்ம கையில் இல்லே. ஆனா இது ரொம்ப டூ மச்னு பார்த்தாலே தெரியுது. சரிதானே?



இன்னொரு நல்ல செய்தி. பெரிய பள்ளிகளில் சேர்க்கை குழந்தைகளுக்கு (PreKG) மட்டும்தான். மூன்றாம் வகுப்புக்கெல்லாம் அனுமதி கிடையாதாம். இதுக்கு என்னடா காரணம்னா, சின்ன வயசுலேந்து அவர்களை நல்லா தயார் செய்கிறார்களாம். நடுவில் வர்றவங்க தகுதி எப்படி இருக்கும்னு தெரியாதாம். அடங்கொப்பா முடியல என்னாலே. ஆனா என்னைப் பொறுத்தவரை அது ஒரு நல்ல விஷயம். என்னை யாரும் அந்த பள்ளியில் சேர்க்கலைன்னு சொல்லமுடியாது. அவங்கதான் சேர்க்கமாட்டாங்கன்னு சொல்லிடலாம்.



இப்படியாக பெரிய பள்ளிகள் எதுவும் பக்கத்தில் கிடையாது, சேர்க்கவும் முடியாதுன்னு தெரிந்த பட்சத்தில் (அப்பாடா!), அடுத்த ரக பள்ளிகள் பட்டியல் எடுக்க ஆரம்பிச்சோம்.



தொடரும்...



Read more...

Thursday, December 1, 2011

மடக்கவுஜ!




நீதான் வீட்டுக்குப் பெரியவன்
நீதான் சின்னவங்களை
அனுசரிச்சி போகணும்

அவங்க உன்னை விட
பெரியவங்க - நீதான்
அவங்ககிட்டே
மரியாதையா நடந்துக்கணும்

ச்சின்னச்சின்ன
விஷயங்களுக்காக
நண்பர்களோட
சண்டை போடாதே
அவங்க தயவு
பிறகு தேவைப்படும்

எவ்ளோ பெரிய
தவறு செய்திருந்தாலும்
நண்பர்களை
மன்னித்துவிடு
பிற்காலத்துலே
அவங்க உதவியாயிருப்பாங்க

உன் மேனேஜர்
திட்டினாரா
நீதான் ஏதாவது
தப்பு செய்திருப்பே

உன் குழுவில்
யாரேனும் சரியா
வேலை செய்யலியா -
உனக்கு வேலை
வாங்கத் தெரியல

எல்லாமே நான்தான்
செய்யணும்னா
எல்லா தப்பும்
என்னுது மட்டும்னா

ங்கொய்யாலே..

இந்த உலகத்துலே
மத்தவங்கல்லாம்
எதுக்காக வந்துருப்பாங்க?

***

பிகு: மடக், மடக்கி எழுதியால் இதை மடக் கவுஜ'ன்னு யாரும் திட்டும்முன் நானே தலைப்பில் சொல்லிட்டேன்!!

***





Read more...

Monday, November 21, 2011

புகைப்படக் கருவி.




இந்தியாவில் இருந்தவரை புகைப்படக் கருவியை காகிதத்தில் எழுதி வைத்துதான் பார்த்திருக்கிறோம். குடும்ப விழாக்களில் மத்தவங்க படம் எடுக்கும்போது டக்குன்னு அவங்க பக்கத்திலேயோ பின்னாடியோ போய் நின்னுக்கிட்டு ஈஈஈன்னு சிரிக்கிற நல்ல பழக்கம் மட்டும் இருந்தது.

அப்புறம் காலச்சக்கரம் சுழன்று ஒரு நாள் அமெரிக்கா வந்து சேர்ந்தோம். நம்ம மக்கள் காட்டிய பாதையில் உடனடியாக ஒரு பு.கருவி வாங்கினோம். அதைக் கொண்டு வந்து கொடுத்த தபால்காரரை க்ளிக் செய்ய ஆரம்பித்து, படம் எடுத்தோம், எடுத்தோம் - வாழ்க்கையில் ஓரத்திற்கே போய் எடுத்தோம். (பிறகு SD கார்ட் தீர்ந்துவிட்டதால் திரும்பி வந்துவிட்டோம்!).

அதன் பிறகு வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிப் போனது அந்த அருவி ச்சே கருவி.

ஒரு நாள் / பல நாள் பயணமாக வெளியே கிளம்பும்போதெல்லாம் என் குடும்ப உறுப்பினர்கள் (ஆமா. அவங்க ரெண்டு பேர்தான்!) என்னென்ன பொருட்கள் கொண்டு போகணும்னு பட்டியல் போட ஆரம்பிப்பாங்க. அந்த பட்டியலில் முதலில் இடம்பெறுவது - அதேதான்.

வெயிட். பட்டியல் போடறது மட்டும்தான் அவங்களது. பு.கருவியும் அதற்குண்டான சாமான்களும் பொறுப்பா எடுத்து வைப்பது என் வேலை. ’பொறுப்பா’ன்னு படிச்சீங்கல்லே. அதுதான் நம்மகிட்டே இல்லேன்னு தெரியுமே. பல தடவை சிலபல மேட்டர்களை மறந்து திட்டு வாங்குவதுண்டு.

இப்படிதான் போன வருடம், FeTNA மூணு நாள் விழாவுக்கு போயிருந்தோம். நிறைய நடிகைகள் வர்றாங்க. எல்லாருடனும் படம் புடிச்சிக்கணும்னு தங்ஸோட ஆசை. சரியா படிங்கப்பா. என் ஆசை இல்லை. சரிதான்’னு சொல்லி கிளம்பி போயாச்சு.

நடிகைகளோட படம் பிடிக்க, புது ட்ரெஸ், குளிர் கண்ணாடி இதெல்லாம் எடுத்துப் போனேன் பாருங்க, ஒரே ஒரு பொருளை மறந்துட்டேன். என்ன பு.கருவியோட பேட்டரி மறந்துட்டியான்னு கேக்கப்படாது. அப்படியெல்லாம் நான் செய்வேனா? ஹிஹி. பு.கருவியையே மறந்துட்டேன். லட்சுமிராய் பக்கத்துலே போய் நின்னு (சரி சரி. எல்லாரும் உக்காருங்க) பு.கருவி இருக்கிற தோல்பையை திறந்து பார்த்தா, உள்ளேயிருந்து வெறும் காத்துதான் வருது. கருவியை காணோம். அவங்களும் பெரிய மனசு செய்து ரெண்டு நிமிஷம் பேசிட்டு அனுப்பிட்டாங்க!!. (அப்புறம் நடந்த லட்சார்ச்சனையைப் பற்றி நான் சொல்ல மாட்டேன்).

இப்படியில்லாமே எல்லாத்தையும் சரியா எடுத்துப் போன நிகழ்வுகளும் உண்டு. ஆனா அப்பல்லாம் இவங்க ரெண்டு பேரும் செய்யற ரப்சர் தாங்கவே முடியாது.

உதாரணத்துக்கு ஒண்ணு: பூ, புஷ்பம், புய்ப்பம் எது மாட்டினாலும், அதை ஐந்து வித கோணங்களில் படம் பிடிச்சிப்பாங்க. ஐந்து கோணமா அப்படின்னு கேக்குறவங்களுக்கு. இடது, வலது, முன்னே, பின்னே மற்றும் மேலே. அந்த பூ-க்கு கீழே போய் படம் பிடிக்கமுடியாததால் அதை விட்டுடுவாங்க. அது மட்டுமில்லாமே எக்கச்சக்க படங்க எடுப்பாங்களா, அதையெல்லாம் slideshowவில் போட்டு வேகமாக ஓட்டினால், ஒரு காணொளியே ரெடி.

சரி போயிட்டு போகுதுன்னு வீட்டுக்கு வந்தா, ஒரு பத்து நிமிடம் உக்கார விடமாட்டாங்க. உடனே அதை கணிணியில் போட்டு, இணையத்தில் ஏத்தி, ஊருக்கு சொல்லி - அப்பப்பா.. முடியலடா சாமி.

இப்பகூட பாருங்க, வெளியே போயிட்டு வந்து, புகைப்படங்களை இணையத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். இருங்க. உள்ளேயிருந்து ஏதோ சொல்றாங்க. என்னன்னு கேட்போம்.

”ஏங்க இங்கே கொஞ்சம் வாங்க. ச்சின்ன கரப்பான்பூச்சி ஒண்ணு போகுது. இந்த ஊர் க.பூ இந்தியாவில் யாரும் பாத்திருக்கமாட்டாங்க. டக்குன்னு காமிரா எடுத்துட்டு வாங்க.”

ஐயய்யோ. மறுபடி காமிராவா? நான் கொஞ்ச நேரத்துக்கு தலைமறைவாகிடப் போறேன். நீங்களும் எஸ்கேப்பாயிடுங்க. என்ன?

***

Read more...

Saturday, October 29, 2011

நீங்க குடுமியெல்லாம் வைக்கத் தேவையில்லை!


சஹானாவை பள்ளியிலிருந்து கூட்டிவர எப்போதாவது நானும் போவேன். ஹிஹி ஆபீஸை கட் அடித்துதான். யாரும் போட்டுக் குடுத்துடாதீங்க. பள்ளிக்கதவு திறக்கும்வரை பெற்றோர்கள் வெளியே தவம் கிடக்க வேண்டிவரும். அப்போது பெரும்பாலும் மக்கள் தங்கள் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருப்பர்.

அன்று ஒரு நாள் நானும் அங்கே காத்திருந்தபோது கூட சில தேசிகளும். நாம்தான் தேசியை ஏறெடுத்து பார்க்கமாட்டோமே (விவரம் இப்போதான் போன பதிவில்!), அதனால் தலைகுனிந்தவாறே கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் ஒருவர் வந்து - ஹலோ!.

ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா. இன்னிக்கு நான் மாட்டிக்கிட்டேன்னு நினைச்சி பார்த்தா, அவர் தேசியில்லை. ஏதோ ஒரு தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்.

“நீங்க இந்தியாவா?”

இல்லை. சத்யா - ன்னு சொல்ல வந்து பிறகு நாட்டை கேட்கிறார் போலன்னு நினைச்சி - யெஸ் என்றேன்.

“பிருந்தாவன் போயிருக்கீங்களா?”

பிருந்தாவன்? நமக்குத் தெரிந்தது எல்லாம் இவையே:

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் - சென்னை - பெங்களூர் மார்க்கத்தில் நிறைய முறை போயிருக்கிறேன். ஆனா அந்த வண்டி பற்றி இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பிருந்தாவன் தோட்டம் - பழைய தமிழ், இந்தித் திரைப்படங்களில் பாட்டுன்னா கண்டிப்பா அது இங்கேதான் நடக்கும். நான் போனதில்லை. ஆனா இவருக்குத் தெரிந்திருக்குமோ? போயிருப்பாரோ? - தெரியல.

இதைத் தவிர வேறெதும் பிருந்தாவன் எனக்குத் தெரியவில்லை.

அதனால், அவரிடமே கேட்டேன் - ”எந்த பிருந்தாவன்?”

”பகவான் கிருஷ்ணர் பிறந்த இடம். மதுரா? பிருந்தாவன்?”

ஆஹா. சரி சரி. “ஆமா. போயிருக்கிறேன். நல்ல இடம். நீங்க இந்தியா வந்திருக்கீங்களா?”

“இல்லை. நான் Ecuador நாட்டைச் சேர்ந்தவன். பிருந்தாவன் போகணும்னு பலவருட விருப்பம். அடுத்த வருடம் கண்டிப்பா போவேன். நான் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் இருக்கிறேன். இங்கே பாருங்க குடுமி”ன்னு திரும்பி குடுமியை ஆட்டிக்(!!) காண்பித்தார்.

”என் பொண்ணுங்க ரெண்டு பேர் இந்த பள்ளியில்தான் படிக்கிறாங்க. பேரு ராதா மற்றும் சுபத்ரா”.

”வாவ். அருமையான பெயர்கள். ரொம்ப அழகா பேர் வைச்சிருக்கீங்க”.

”அடுத்து பையன் பொறந்தா கிருஷ்ணான்னுதான் பேர் வைப்பேன்”.

”ஆஹா. ரொம்ப அட்வான்ஸ்டா பேரெல்லாம் ரெடி பண்ணிட்டீங்க”. இதை நான் சொல்லவில்லை. நினைத்தேன். (எப்படா இந்த கதவைத் திறப்பாங்க?)

“நீங்க பகவான் கிருஷ்ணரை கும்பிடுவீங்களா?” - இது அவர்.

“ஆமா” - நான்.

“அப்போ நீங்களும் வரலாமே. இங்கே பக்கத்தில்தான் ஒரு வீட்டில் பஜனைகள் நடக்குது. அடுத்த தடவை பார்க்கும்போது நான் உங்களுக்கு சில புத்தகங்கள், CDக்கள் தர்றேன். நீங்க குடுமியெல்லாம் வைக்கத் தேவையில்லை.”

அந்த நாளுக்குப் பிறகு கடந்த ஒரு மாசமாய்  சஹானாவை பள்ளியிலிருந்து கூட்டிவர நான் போகவில்லை.

*****

Read more...

Sunday, October 16, 2011

நொறுக்ஸில் இரு விடயங்கள்.



ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்தவுடன் சஹானா சொன்னது.

“இன்னிக்கு என் டீச்சர், மொத்த வகுப்பிற்கும் நான்தான் rolemodelனு சொன்னாங்க. அதுக்கு சில நண்பர்கள் கை தட்டினாங்க”.

”அப்படியா?. வெரி குட். என்ன ஆச்சு?”

”வகுப்பில் இருக்கும்போது திடீர்னு யாரோ உள்ளே வந்தாங்க. டீச்சர் அவங்ககிட்டே பேசும்போது, இங்கே நண்பர்கள் எல்லாரும் கசமுச கசமுசன்னு அவங்களுக்குள் பேசிக்கிட்டாங்க. நான் மட்டும் யாரிடமும் பேசாமல் எழுதிக் கொண்டிருந்தேன். அதனால் டீச்சர் - சஹானா மட்டும்தான் பேசாமல் நல்ல புள்ளையா எழுதிட்டிருக்கா. அவதான் இந்த வகுப்பிற்கே rolemodel. நீங்களும் அவளை மாதிரியே இருக்கணும்.”னு சொன்னாங்க.

”சூப்பர். அப்படித்தான் இருக்கணும். அதுக்கு நீ டீச்சருக்கு நன்றி சொன்னியா?”

“இல்லை”

“ஏன்? யாராவது உன்னை பாராட்டினா அவங்களுக்கு நன்றி சொல்லணும். அதுதான் நல்ல பழக்கம்.”

இதுக்கு இவங்க சொன்னதைக் கேட்டு நான் - வேதம்புதிதில் அடி வாங்கிய சத்யராஜ் தலையை அப்படி இப்படி திருப்பியமாதிரி திருப்பிக் கொண்டேன். அப்படி என்ன சொன்னாங்க? பதில் கடைசியில்.

***

ஒரு ஒருவழிப்பாதையில் சரியாக போகும் திசையில் பார்த்தவாறு இருக்கும் வண்டி, அப்படியே பின்னாடி வந்தால் எப்படி இருக்கும்?

ஒண்ணும் புரியலியா? கவலைப்படாதீங்க. இந்த ஒளித்துண்டை பாருங்க. பிறகு பேசுவோம்.



எங்க ஊர் நூலகத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஒரு ஒருவழிப்பாதையில் வலது திரும்பணும். அந்த வலதிலிருந்து வண்டி எதுவும் வராது என்பதால், இடது பக்கம் மட்டும் பார்த்துக்கொண்டு திரும்பிவிடுவேன்.

அன்றும் அப்படியே திரும்பியவுடன் பார்த்தால், ஒரு வண்டி ‘ரிவர்ஸில்’ படுவேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. பதற்றத்தில் என்னால் ஒலி எழுப்பவும் முடியவில்லை. சரக்கென்று சாலையோரத்தில் வண்டியை ஓட்டி நிறுத்தினேன்.

எந்த வெண்ணைய் இப்படி போகக்கூடாத பாதையில் நேராக போகமுடியாததால், ரிவர்ஸில் ஓட்டிப்போவது என்று பார்த்தால், அது ஒரு தேசி வெண்ணைய். அப்போதான் என் மனம் சமாதானமடைந்தது. நம்மைத் தவிர வேறு யாரால் இப்படி செய்யமுடியும்?

ஒழுங்கா போகணும்னா, நாலு தெரு சுத்தி வரணும். அதுக்கு இப்படி குறுக்கு வழி கண்டுபிடித்த அந்த தேசி வாழ்க.


****

”நான் யாரிடமும் பேசவில்லை என்பதால்தான் என்னை rolemodelனு சொன்னாங்க. அதுக்கு நான் நன்றின்னு சொல்லணும்னா பேசியாகணும். அப்படி பேசிட்டேன்னா, rolemodel இல்லேன்னு அர்த்தமாயிடும். அதனால்தான், நான் அப்பவும் பேசவில்லை.”

எப்பூடி?

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP