Friday, March 29, 2013

@விவாஜி, எங்க வீட்டுக்கு வராதீங்க!



முதல் மேட்டர் அமெரிக்காவில் நடந்தது.

தண்ணீர் லாரியிலிருந்து கனெக்‌ஷன் மாறிப் போய் வடிவேலுவின் வாயிலிருந்தும் அங்கிருந்தும் தண்ணீர் வந்ததுபோல், அமெரிக்காவிலும் எங்க வீட்டில் கனெக்‌ஷன் மாறிப்போய் கேபிள் டிவி ஒளிபரப்பு வந்துகொண்டிருந்தது. நாங்களும் மாதா மாதம் $79.99 கட்டாமல் சுமார் 4-1/2 வருடங்கள் அதை ஓசியில் பார்த்து வந்தோம். அப்போ வந்தாரு பாருங்க எங்க வீட்டுக்கு, இந்த @விவாஜி. என்ன பண்ணாரோ தெரியாது, அடுத்த நாளே Comcastலிருந்து ஆள் வந்து, நீங்க ரொம்ப நாளா பணமே கட்டாமே டிவி பாக்குறீங்க, இனிமே அப்படி முடியாதுன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டுப் போயிட்டாரு. அப்படி பணம் கட்டி, டிவி பார்க்கவேண்டிய அவசியமேயில்லைன்னு நாங்களும் சொல்லிட்டு, ஓசியில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் யூட்யூப்க்கு மாறிட்டோம்.

இந்த மேட்டரை நினைவில் வைச்சிக்கோங்க. அடுத்தது இந்தியாவில்.

இந்தியா வந்த புதிதில் சரியான வெயில் காலம். ஏசி, மின்விசிறி எல்லாம் பயன்படுத்த வேண்டியதாப் போச்சு. ஒரு வருஷம் கழிச்சி இப்பதான் எவ்வளவு வெயில் அடிச்சாலும், ஒரு கன்னத்தில் அடிச்சா, இந்தான்னு மறு கன்னத்தை காட்டுற அளவுக்கு பழகிப் போச்சு. அப்போ NRIதானே. அதனால்தான் வெயில் தாங்கமுடியல. அடுத்த மாசம் மின்கட்டணம் வந்தது. ரூ.50 மட்டுமே. சரி, புதுசா இந்தியா வந்ததுக்காக எனது மன தைரியத்தைப் பாராட்டி தமிழக அரசு, சோப்பு டப்பா தராமல் இப்படி மின் கட்டணத்துலே சலுகை தர்றாங்கன்னு நினைச்சி விட்டுட்டோம்.

மறுபடி அடுத்த தடவை. இப்பவும் அதே ரூ.50க்கு பில். அதெப்படி இவ்வளவு பயன்படுத்தறோம். ஆனா கட்டணமே வசூலிக்க மாட்றாங்கன்னு எங்களுக்கு செம கோபம். ஆனாலும், அரசு செய்தா எதுவுமே சரியாதான் இருக்கும்னு எதுவுமே பேசாமே கட்டிட்டோம். ஆனா, எங்க அபார்ட்மெண்ட் நண்பர்கள் சும்மா இருக்க மாட்டாங்களே. அவங்களுக்கு பயங்கரக் கடுப்பு. எங்களுக்காக அவங்களே புகார் செஞ்சாங்க. ‘எங்களுக்கு மட்டும் ரூ.1000க்கு மேல் போகுது. இவங்களுக்கு வெறும் ரூ.50தானா. உடனே சரிசெய்யவும்’. ஆனா, அது அரசு இயந்திரமாச்சே. கொஞ்சம் மெதுவாதான் செயல்படும்.

அடுத்த முறை மீட்டர் கணக்கிடவந்த நபரிடம் எங்க சார்பா மொத்த அபார்ட்மெண்ட் ஆட்களும் பேசினாங்க. (நாங்க அமைதியா பின்னாடி நின்றிருந்தோம்!). அவரும், நாளை காலை 11 மணிக்கு ஆபீஸ் வாங்க, சரி செய்துடுவோம்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

அடுத்த நாள். எங்களைவிட எங்க நண்பர்கள்தான் பயங்கர பரபரப்பா இருந்தாங்க. இரவு 1 மணியிலிருந்து ஒரு மணிக்கொருதடவை ஒருத்தர் அலாரம் வைச்சிண்டு, எங்கே 11 மணி ஆயிடப்போகுதோ, எங்கே நாங்க மின் அலுவலகத்திற்கு போகாமே இருந்துடுவோமோன்னு பாத்துக்கிட்டே இருந்தாங்க. ஒரு சில குழந்தைகளும் வந்து, ‘அங்கிள், டைம் என்ன ஆச்சு?, 11 மணி ஆச்சான்னு அப்பா கேட்டு வரச்சொன்னாரு’ன்னு நடமாடும் அலாரமா மாறினாங்க.

மொத்த கட்டிடமே தெருவுக்கு வந்து, வெற்றியோடு வாருங்கள் என்று எங்களை வீரத்திலகமிட்டு அனுப்பி வெச்சாங்க. நாங்க திரும்பி வர்றவரைக்கும் யாரும் குளிக்காமே, சாப்பிடாமே, ஒரு நல்ல செய்திக்காக காத்திருந்தாங்க.

ஆனா EB ஆபீஸ்லே என்ன நடந்துச்சு? மீட்டர் கருவியை மாத்தணும். அதுவரைக்கும் உங்க வீட்டுப் பயன்பாடு இவ்வளவு (x) இருப்பதால், நீங்க இந்த கட்டணத்தை (y) கட்டிட்டு வாங்கன்னு ஒரு கட்டணத்தை சொன்னாங்க. வழக்கம்போல இந்த கட்டணம் எங்களுக்கு ஓகே. ஆனா, எங்க நண்பர்களுக்கு - ம்ஹூம். அவங்க மறுபடி ஆபரேஷன் புகாரை ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு தடவையும் மின் அளவை குறிக்க வரும் நபரிடம் புகார் சொல்ல ஆரம்பிச்சாங்க.

ஆனா... ஆனா.. இன்றுவரைக்கும் அந்த பிரச்னைக்கு தீர்வே வரலை.

இந்த அருமையான சந்தர்ப்பத்தில், நண்பர் @விவாஜி நம்ம வீட்டுக்கு வந்து, அதனால் நம் மின்வாரியமும் வீறுகொண்டு எழுந்து எங்க பிரச்னையை தீர்த்துட்டாங்கன்னா, என்னை எங்க வீட்டுலே தீர்த்துடுவாங்க. ஆகவே, <தலைப்பு>.

****


Read more...

Sunday, December 9, 2012

பஜ்ஜியோ பஜ்ஜி!


நண்பர் ஒருவர் தொலைப்பேசினார். நம் வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர்தான். மாலையில் அவர் வீட்டிற்கு தொலைதூர உறவினர்கள் இருவர் வரப்போவதாகவும், அவர்களுக்காக பஜ்ஜி செய்யப் போவதாகவும் கூறினார். நான் ஒண்ணுமே ஜொள்ளவேயில்லை. ஆனாலும், தொலைப்பேசியிலேயே அதை கண்டுகொண்ட நண்பர், பஜ்ஜிகளை செய்து முடித்ததும், சூட்டோடு சூடாக 10 பஜ்ஜிகளை கொடுத்தனுப்பினார். அவர் நாமம் வாழ்க!

மாலையில் மறுபடி கூப்பிட்டார். உறவினர்கள் வந்துவிட்டதாகவும், இருவருக்கு பதில் ஐவர் வந்திருப்பதாகவும், இப்படி திடீரென்று வந்துவிட்டதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று புலம்பினார். நானும் டென்சனாகி விட்டேன்.

அமெரிக்காவில் பக்கத்து வீட்டிற்குப் போவதென்றாலும், முதலில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, சரியாக அந்த சமயத்தில், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே போய் வருவர். திடீரென்று யார் வீட்டிற்கும் போய் கதவைத் தட்டமுடியாது. நண்பர் வீட்டில் டிபன், சாப்பாடு சாப்பிடும் நேரமாக போய் நான் பல நாட்கள் உட்கார்ந்ததெல்லாம் தற்செயலானதேன்னு சொன்னா யாரும் நம்பப் போவதில்லை. ஆகவே நானும் சொல்லவில்லை.

வேறு சில நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். ’இன்னிக்கு 2 டு 4 நான் ஃப்ரீயா
இருக்கேன். வந்தீங்கன்னா கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்’னு சொல்வாங்க. அப்போ சரியா சாப்பாடு நேரமும் முடிஞ்சிருக்கும். மாலை காபி/டிபன் நேரமும் வந்திருக்காது. அந்த கேப்புலே வெறும் பேசிட்டு அனுப்பிடலாம்னு நினைப்பாங்க. ஆனா, நாங்களும் விடாமே எதையாவது வாங்கி சாப்பிட்டுத்தான் வருவோம்னு வைங்க..

நிற்க. இன்றைய பிரச்னைக்கு வருவோம். அதிக விருந்தாளிகள் வந்தா, நண்பர்தானே டென்சனாகணும், நான் ஏன் டென்சன் ஆனேன்னு யாராச்சும் கேட்டீங்களா? முதலில் எங்களுக்கு பஜ்ஜி கொடுத்தாரே, நினைவிருக்கா, இப்போ அதிகம் பேர் வந்துட்டாங்கன்னு அந்த பஜ்ஜிகளை திரும்பிக் கேட்டுட்டா? எலி பிடிக்க வெச்ச மசால்வடையை எடுத்து கஸ்டமருக்கு கொடுக்கற மாதிரி ஒரு ஜோக்கு வருமே, அதைப் போல இவரும் பண்ணிட்டா? அதனால்தான் நான் டென்சனானேன்.

ஆனா பாருங்க, நண்பர் மறுபடி அவர் நண்பர்தான் நிரூபிச்சிட்டாரு. கொடுத்த வாக்கையும், பஜ்ஜியையும் திருப்பி வாங்கமாட்டேன்னு சத்தியமே பண்ணிட்டாரு. இருந்தாலும், மனசு மாறிட்டார்னா என்ன பண்றதுன்னு அவர்கிட்டே பேசி தொலைப்பேசியை வெக்கறதுக்குள்ளே அவற்றை சாப்பிட்டு ஏவ் விட்டாச்சு.

அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமா பட்சணங்களை செய்ங்கன்னு அறிவுரை கூறி, மறக்காமல், அடுத்த வாரம் அவர் வீட்டுக்கு யாராவது வர்றாங்களான்னு கேட்டு அழைப்பை கட் செய்தேன்.

***
 

Read more...

Friday, November 16, 2012

தலைமுடி பிரச்னை. தீர்வு தேவை.


இந்த தலைமுடி இருக்கிறதே தலைமுடி. அதனால் எனக்கு வாழ்க்கையில் பலப்பல பிரச்னைகள். நானும் நிறைய நண்பர்களை பார்த்திருக்கிறேன். யாருக்கும் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியல. தொலைக்காட்சி அல்லது புத்தகங்களில் ஏதேனும் தீர்வு கிடைக்குதான்னு நானும் சல்லடை போட்டு தேடியாச்சு. சல்லடைதான் போச்சே தவிர, தீர்வு இல்லை. சரி, ஏதாவது மருத்துவர்கிட்டே போகலாம்னு போனேன். அனைவரும் இதுக்கு ஒண்ணும் பண்ணமுடியாது. அதுவா சால்வ் ஆனாதான் உண்டு. கடவுள் மேலே பாரத்தை போட்டுட்டு வேலையை பாருங்கன்னு சொல்லிட்டாங்க.

இதையே நினைச்சி நினைச்சி ராத்திரியெல்லாம் தூக்கமே வராது. தெருவிலே நடந்து போனா, அனைவரின் தலையை ஆசையோடு பார்த்துக் கொண்டே போவேன். நல்ல அழகான சின்னச்சின்ன தலைமுடியோட யாராவது போனா, கிட்டே போய் அந்த முடியை கோதி விடணும்போல தோணும். ஆனா கூடவே தங்ஸ் வருவதால், அந்த ஆசை கானல்நீராகவே போயிடுச்சு. எப்போதும் தலையை நினைச்சிக்கிட்டே இருந்ததால், காலப்போக்கிலே அஜித் ரசிகனாகூட ஆயிட்டேன்னா பாத்துக்குங்க.

வந்தா போயித்தானே ஆகணும். போனா வந்துதானே ஆகணும்ற விதிப்படி, தலைமுடின்னா உதிரத்தான் செய்யும். நிறைய பேருக்கு அந்தப் பிரச்ச்னை இருக்கே? இதுக்கெல்லாம் மனசை தளரவிடலாமான்னு கேக்கறவங்களுக்கு, ஹலோ, என் பிரச்னை அது இல்லீங்க.

என் பிரச்னை என்னன்னா, என் தலைமுடி வேகமா வளர்றதுதான். வேகமான்னா, ஒரு நாடகத்துலே எஸ்.வி.சேகர் சொல்றமாதிரி - இந்தப் பக்கம் ஷேவ் செய்தா, அந்தப் பக்கம் வளர்ந்துடுது - அவ்ளோ வேகமா இல்லே. உதாரணத்துக்கு, ஒண்ணாம் தேதி போய் முடிவெட்டிக்கிட்டு வர்றேன்னு வெச்சிக்குங்க. பதினைந்தாம் தேதி, மண்டை முழுக்க கருகருன்னு வளர்ந்து நிக்கும். மண்டைக்குள்ளே வளரவேண்டிது மட்டும் வளரவே மாட்டேங்குது, இந்த முடி மட்டும் எப்படின்னு தங்ஸ் ஆசையா கேப்பாங்க. கூடவே, உள்ளே நல்ல மண்ணு இருக்கறதால், செழிப்பா வளருதுன்னும் பாராட்டுவாங்க. எது எப்படியோ, இருபது நாளைக்கொரு தடவை கட்டிங் பண்ண வேண்டியதாயிடுது.

இந்த ஷாம்பூ பயன்படுத்தினா அதிகமா முடிகொட்டுது. அந்த எண்ணெய் தடவினேன், கையோடு முடி வந்திடுது - அப்படின்னு பலர் வருத்தத்தோடு சொல்லக் கேட்டிருக்கேன். அப்போது எனக்கு ஏற்படும் சந்தோஷ ரியாக்‌ஷனை அவங்களால் புரிஞ்சிக்கவே முடியாது. ஒரு மாதிரி பாத்துட்டு போவாங்க. நானும் ஓடிப்போய் அந்த ஷாம்பூ/எண்ணெய் வாங்கி ஆசைஆசையாய் (என்) தலையில் தடவுவேன். பலன்? நிறைய இருக்கும். என்ன? முடிதான். வேறென்ன. அன்று வந்ததும் அதே முடி... சேச்சேச்சே... இன்று வந்ததும் இதே முடி’ன்னு நானும் பாடிக்கிட்டே தலையை வாரிக்குவேன்.

இங்கேயாவது பரவாயில்லை, முடிவெட்ட சுமார் நூறு ரூபாய் ஆகுது. அமெரிக்காவில் இருந்தவரை, ஒவ்வொரு தடவையும் $18+$2 டிப்ஸ் கொடுத்துட்டு வரும்போது டென்சனாயிருக்கும். ஆண்டவா, என்னாலே ’முடி’யலன்னு கத்துவேன். ஆனா, எந்த பிரயோசனமுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு (பல!) முடிகளுமாய் அதுபாட்டுக்கு வளர்ந்துகிட்டே இருக்கு.

ஒருமுறை முடிவெட்டி விட்ட ஒரு சீனப்பொண்ணுகிட்டே - முடி இருக்கற மாதிரி இருக்கணும். ஆனா இருக்கக் கூடாது. அப்படி வெட்டி விடுங்கன்னு சொன்னேன். அதுக்கு அந்தப் பொண்ணு, உங்க மூஞ்சிக்கு(!) அப்படி செய்தா நல்லாவே இருக்காது. உங்க வீட்டுலே என்னை தேடி வந்து அடிப்பாங்க. அதனால், ஓரளவுக்கு வெட்டி விடறேன். சிரமம் பார்க்காமே முடி வளர்ந்தவுடன் மறுபடி இங்கேயே வந்துடுங்கன்னுச்சு. வீட்டுலே அனுமதி கிடைச்சாக்கூட கடைக்காரி அனுமதிக்க மாட்றா. எல்லாம் தலை(முடி)யெழுத்து. தவிர, மாசாமாசம் வர்றாமாதிரி அவருக்கு ஒரு பெர்மனெண்ட் கஷ்டமர் வேணுமே.

வெச்சா குடுமி, சரிச்சா மொட்டைன்ற பழமொழியின் அருமை தங்ஸுக்கு தெரியல. பங்க் (தமிழில் கூந்தல்) வெச்சிக்கவும் விடமாட்றாங்க. மொட்டை அடிக்கவும் அனுமதி இல்லை. சரி, முடிவெட்டிக்க மாசாமாசம் ஒரு மணி நேரம் ஒதுக்க ’முடி’யாதான்னு சுலபமா கேட்கலாம். ஆனா ஒரு சரியான கடை, கட்டிங் செய்துவிடற ஆள் கிடைக்கறவரை செய்கிற சோதனைகள் இருக்கே. ஒவ்வொருமுறையும் தலை ஒவ்வொருவிதமா இருக்கும். ஆபீஸில் என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாங்கன்னு கொஞ்ச நாள் கழிச்சிதான் என் மர(முடி)மண்டைக்கு புரிஞ்சுது. அப்புறம் ஒரு வழியா சென்னையில் ஒரு கடை/ஆள், பெங்களூருவில் ஒரு கடை/ஆள் கிடைச்சாங்க. இது செட் ஆகறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே.. என் நண்பனுக்குக்கூட இந்த மாதிரி பிரச்னை வரக்கூடாது.

ஓகே. இவ்ளோ தூரம் படிச்சிட்டீங்க. ஒழுங்கு மரியாதையா எனக்கு ஒரு தீர்வு சொல்லிட்டுப் போங்க.

***

Read more...

Wednesday, August 29, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்


சென்ற மாதம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானபோது ( :-(((( ) அந்த வண்டியில் பயணம் செய்த நாட்கள் நினைவில் வந்தன. அப்போ எழுத ஆரம்பிச்சது இந்த பதிவு, இன்னிக்குதான் முடிஞ்சது. ஒரு பத்து roundtrip அடித்திருப்பேன் அதில். அந்த நினைவுகள் bullet pointsஆக இங்கே இந்த பதிவில்.

** மத்தியப் பிரதேசத்தில் பல மலைக்குகைகள் [tunnels] வரும். அவை ஒவ்வொன்றையும் எவ்வளவு நொடிகளில் வண்டி கடக்கிறது என்ற கணக்கெடுப்பு எடுப்பேன். ஆனால் ஒரு முறைகூட முத்த சத்தம் செய்துவிட்டு, பக்கத்தில் இருப்பவரை அறைந்ததில்லை.

** மறுநாள் மதியம் சம்பல் பள்ளத்தாக்கை கடக்கும்போது, கொள்ளைக்காரங்க வருவாங்க, கல் எடுத்து வண்டியில் வீசுவாங்கன்னு ஒரு வதந்தி கேள்விப்பட்டிருந்ததால், பயந்துகொண்டே பயணம் செய்திருக்கிறேன்.

** பயந்துகொண்டே சீட்டு விளையாடும் மக்கள், அதே பெட்டியில் ராணுவத்தினர் யாராவது பயணம் செய்தால், பயமே இல்லாமல் (அவர்களையும் சேர்த்துக்கொண்டு!) தைரியமாக சீட்டு விளையாடுவார்கள். நான் வெறும் வேடிக்கை.

** சரியான கோடை காலத்தில், இரண்டாம் வகுப்பில் போகும்போது வெயிலின் தாக்கம் தெரியாமலிருக்க (என்) தலையில் தண்ணீர் ஊற்றிய காலமும் உண்டு; 2ACயில் செம குளிரால் போர்வையால் போர்த்தியவாறே உலாத்திய காலமும் உண்டு.

** பயணச்சீட்டை இணைத்தால்தான் ஆபீஸில் reimbursement கிடைக்கும் என்பது தெரியாமல், அதை நிலையத்துக்கு வெளியில் நிற்கும் டிக்கெட் செக்கரிடம் கொடுத்துவிட்டு நிதித்துறையில் கெஞ்சிக் கிடந்தேன் சில நாட்கள்.

** வண்டியில் வருவதையெல்லாம் எனக்கும் வாங்கிக் கொடுத்து பேசிக்கொண்டே வரும் மாந்தர்களையும்; அனைத்தையும் மூடிமூடி சாப்பிட்டு எனக்கு வெறும் சிரிப்பை மட்டுமே வழங்கிய நண்பர்களையும் பார்த்த நாட்கள் அவை.

** (சென்னைக்கு வரும்போது) போபால், ஜான்சி போன்ற நிலையங்களில் செய்தித்தாள் விற்பவர்கள், தங்கள் விற்பனையை அதிகரிக்க - ’சென்னையில் குண்டுவெடிப்பு. 20 பேர் பலி’ என்று கூவிக்கொண்டே விற்பார்கள். இது பொய்த் தகவல் என்று அறியாதவர்கள் அந்த செய்தித்தாளை விலை கொடுத்து வாங்குவார்கள். அப்படியும் அந்த செய்தித்தாளாவது சரியாக இருக்குமா என்றால், இருக்காது. உள்ளே இருக்கும் பக்கங்களெல்லாம் பழைய (முந்தைய தின) தாள்களாக இருக்கும். ஓரிரு முறை அனுபவப்பட்ட பிறகே எனக்கு புரிந்தது இந்த விஷயம்.

** நாக்பூரில் ஆரஞ்சு வாங்கிட்டு வான்னு ஒவ்வொரு முறையும் வீட்டில் சொல்வதால் ஒரு சின்ன கூடை வாங்கி வருவேன். ஒவ்வொருமுறையும் அதில் அஞ்சு ஆறுதான் நல்லா இருக்கும்.

சென்னை - தில்லி இடையே இரண்டாம் வகுப்பில் போக ஆரம்பித்து, 3AC, 2AC, விமானம் என்று படிப்படியாக முன்னேறினாலும், ஆபீஸ் பிரச்னையோ, அடிக்கடி, ‘என்னங்க, என்னங்க’ பிரச்னையோ இல்லாமல் நாள் முழுக்க தூங்கியவாறு, வேளாவேளைக்கு வண்டியில் கொண்டு வருவதை சாப்பிட்டு, மறுநாள் ஹாயாக ஊர் போய் இறங்குவதை மறுபடி ஒரு முறையாவது செய்யணும். அட, ஆபீஸ் விஷயமா போகும்போது குடும்பத்தை கூட்டிப் போகமுடியாதுல்லா?

***

 

Read more...

Thursday, August 23, 2012

எப்படி இருக்கீங்க? எப்படி இருந்துச்சு உங்க நாளு?


என்னோட நாள் எப்படி இருக்கும்னு யாராலும் சொல்லமுடியாது. ஒரு நாள் பயங்கர பிஸியா இருக்கும். சில நாட்கள் ஒரு (வாடிக்கையாளர்) அழைப்பும் இருக்காது. அட,  ஒரே நாள்லேயே காலையில் பிஸியா இருப்பேன். மாலையில் ஒண்ணுமே இருக்காது. ஆனா, எனக்கு இந்த வேலை சரியா பிடிச்சிருக்கு. ச்சின்ன வயசிலிருந்தே மார்க்கெடிங்தான் எனக்கு பிடிக்கும். அதே போல் இந்த வேலைக்கு வந்துட்டேன்.

மேற்கண்ட பாராவை படிச்சிட்டீங்களா? இது யார் சொன்னது? சொல்றேன். தற்போது தங்கியிருக்கிற Guesthouseலே கூட இருக்கற ஒருவரை நேற்று மாலை ஒரே ஒரு கேள்வி கேட்டேன் - எப்படி இருந்துச்சு உங்க நாள்?. அவ்வளவுதான். அதுக்கு அந்த மனுசர் படபடவென பொரிஞ்சி தள்ளியதுதான் அது. டேய், நான் என்ன கேட்டேன்? உன் நாள் எப்படி இருந்துச்சு? அதுக்கு என்ன சொல்லணும்? நல்லா இருந்துச்சு, நல்லா இல்லே - அவ்வளவுதானே? ஏன் நீ தேவையில்லாமே பேசிட்டே போறே? - இதெல்லாம் நான் மனசுக்குள்ளே கேட்டது.

இதை விடுங்க. தலைப்பில் இருக்கும் முதல் கேள்வியைப் பாருங்க. “எப்படி இருக்கீங்க?”. இதுக்கு மக்கள் சொல்லும் பதில்கள் இருக்கே.

காலை வேளையில் பல வேலைகளை செய்வதற்காக சுறுசுறுப்பாக ஆபீஸ் வந்து ஒருவரைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்டா, அதுக்கு அவர் சொல்லும் பதில் - "ஏதோ போகுது. ஒண்ணும் சரியில்லே". அவ்வளவுதான். அவரு மூட்அவுட்டாக இருப்பது மட்டுமல்லாமல், நம்மையும் switchoff செய்துட்டு போய்விடுவார்.

அடுத்து இன்னொருத்தர். அவர் ஏதோ ஒரு யோசனையில் வந்திருப்பார். கேள்வி கேட்டவுடன், “அட அதை விடுப்பா. இந்த பிரச்னைக்கு ஒரு பதில் சொல்லு”ன்னு ஏதோ ஒரு விஷயத்தை தேவையில்லாமல் நம் தலையில் ஏற்றிவிட்டு போய்விடுவார். எனக்குத் தேவையா இது?

அடுத்தவர். "Fine". இதுதான் பதில். அஷ்டே. all silent. ஏன்யா, நீ என்னை திருப்பி கேட்கமாட்டியா?. சரி விடு. நாளைக்கு பார்க்கலாம்.

இனி அடுத்து வருபவர்தான் நிஜமாகவே டாப். இது ஐந்து வருடம் நான் வேலை பார்த்த என் அமெரிக்க பாஸ். காலை வந்தவுடன், ”குட்மார்னிங் ஸ்டீவ்,
எப்படியிருக்கீங்க”ன்னு கேட்டவுடன், சிரித்தபடியே பலமாக “Wonderful. Excellent. Cannot complain for such an awesome day" அப்படி இப்படியென்று உற்சாகத்துடன்
அவர் சொல்லும் பதில் இருக்கிறதே, தூக்கக் கலக்கத்துடன் ஆபீஸ் சென்று, அடுத்த வாரயிறுதி எப்போ வரும்னு சோம்பேறித்தனமாக காலண்டரை பார்க்கும் எனக்கு (மற்றும் பலருக்கு) செமையா ஊக்கத்தைக் கொடுக்கும். அந்த முழு நாள் இல்லேன்னாலும், கொஞ்ச நேரத்துக்காவது அவரது உற்சாகம் என்னிடம் வந்திருக்கும். வேலை பரபரவென நகரும். இதெல்லாம் அடுத்து ஒரு தேசியை பார்க்கிற வரைதான். அப்புறம் புஸ்ஸ்ஸ்....

அதற்குப் பிறகு, என்னை யார் கேட்டாலும் நானும், ”சூப்பர். அருமையா இருக்கேன். ஒரு பிரச்னையும் இல்லே”ன்னு உற்சாகமா சொல்ல ஆரம்பிச்சேன்.

அப்புறம், இதே கேள்வியை காலையில் வீட்டில் தூங்கி எழுந்ததும் சஹானாவிடம் கேட்க ஆரம்பித்தேன். “செல்லம். குட் மார்னிங். ஹௌ ஆர் யூ?”. நான் இவ்ளோ நேரம் உன்கூடதானேப்பா தூங்கிக்கிட்டிருந்தேன்னு ஆரம்பத்தில் சொன்னவங்க, இப்போல்லாம் ‘சூப்பர், அப்பா’ என்று உற்சாகமாக எழுந்து வரவும் ஆரம்பித்திருக்கிறார்.

அவ்ளோதாம்பா பதிவு. இப்போ சொல்லுங்க. நீங்க எப்படி இருக்கீங்க?

***

Read more...

Thursday, June 21, 2012

நொறுக்ஸ் - June 21, 2012


மனப்பாடம். அமெரிக்காவில் இதை கேள்விப்பட்டே இராத சஹானா, இங்கே தினமும் ஆங்கிலக் கவிதைகள், அறிவியல் கருத்துகள் அப்படி இப்படின்னு பல விஷயங்களை மனப்பாடம் செய்யற நிலைமைக்கு வந்துட்டாங்க.

அடிக்கடி நடக்கும் வகுப்புத் தேர்வைப் பற்றி அவர் சொல்லும் ஒரு குறை என்னன்னா - விடைகள் எழுதும்போது, புத்தகத்தில் இருக்கும் அதே வார்த்தைகளை, அப்படியே பயன்படுத்தினால்தான் சரியான மதிப்பெண் கிடைக்குது. கொஞ்சம் முன்னே பின்னேயோ, சொந்தமாக அதே பொருள் தரக்கூடிய வேறு வார்த்தைகளை போட்டு எழுதினால் தப்பு'ன்னு சொல்லி மதிப்பெண்களை குறைச்சிடறாங்க. இது என்ன நியாயம்?

கரெக்ட். இது என்ன நியாயம்? பதில் என்னிடத்திலும் இல்லை. இன்னொரு முறை திட்டி, ஒழுங்கா மனப்பாடம் பண்ணுன்னு சொல்லியாச்சு.

***

#365Process பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். டிவிட்டரில் சரமாரியா வர்ற விளம்பரங்களை பொறுத்துக் கொள்ளும் நண்பர்களுக்கு நன்றி. பொறுத்துக் கொள்ளாமல் ம்யூட் செய்தவர்களுக்கும் நன்றி. (ம்யூட்'னா என்னன்னு கேக்கறவங்களுக்கு, அதெல்லாம் ஒண்ணுமில்லே. மறந்துடுங்க!).

ஆரம்பிச்சி 115 நாட்கள் ஆயிடுச்சு. இப்போ ஓடும் தொடர்கள்: CMMi, 6Sigma, ITIL & BS7799. கூடிய விரைவில் 6Sigmaவிற்கு தேவையான புள்ளியியலைப் பற்றி எளிய அறிமுகப் பதிவுகளும் வரும். சுட்டி : http://365process.blogspot.com

***

குறுக்குவழிகளை கண்டுபிடிப்பதில் தேசிகள் கில்லாடிகள்னு சும்மாவா சொன்னாங்க. இதோ இன்னொரு உதாரணம்.

ஊரிலிருந்து திரும்பும்போது என் காரை விற்கணும்னு முடிவாச்சு. ஒரு தேசி வந்தாரு. தென்னிந்தியர். எல்லாம் முடிவாயிடுச்சு. ஒரு ஏற்பாடு செஞ்சிக்குவோமான்னு கேட்டாரு. என் காசை கொடுத்துடு, அப்புறம் எதுவேணா செஞ்சிக்கோன்னு சொன்னா, ஒரே அடம். சரி என்னய்யா அதுன்னா, காரை எனக்கு 'பரிசா' (Gift option) தர்ற மாதிரி தந்துடு. நான் தொகையை ரொக்கமா கொடுத்துடறேன் - அப்படின்னாரு.

அதனால் என்னய்யா ஆகும்னா, ரெஜிஸ்ட்ரேஷன் செலவு எனக்கு மிச்சமாகும், உனக்கும் பணம் உடனடியா கிடைச்சிடும்னாரு. நான் இந்த மாதிரி மேட்டரை கேள்விப்பட்டதேயில்லை, என்ன பிரச்னை வருமோ எனக்குத் தெரியாது, ஊருக்கு போற சமயத்துலே ஏதாவது வம்பில் மாட்டிக்க விரும்பலைன்னு சொன்னா, மறுபடி கெஞ்சல். அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லி, ஒழுங்கா ரெஜிஸ்ட்ரேஷன் செய்து வெச்சி, பணத்தை இரண்டு / மூன்று தவணையில் தர்றேன்னு சொன்னதால் நான் ஊருக்கும் வந்துட்டேன்.

அடுத்த பிரச்னை, பணத்தை என் வங்கிக் கணக்கில் போடுவது. அதற்கும் இணையத்தில் பரிமாற்றம் செய்தா ஒருசில டாலர்கள் செலவாகுமாம். அதை மிச்சப்படுத்தணும். சரி, ஒரு காசோலையை தபாலில் அனுப்புய்யா, மேட்டர் முடிஞ்சிடும்னா, காசோலையை காசு கொடுத்து வாங்கறேன், அதை செலவழிக்க மாட்டேன்றாப்பல. ஒரு நடை போய் என் கணக்கில் நீயே காசு போடுய்யான்னா, அவர் இருக்கும் ஊரிலிருந்து கொஞ்ச தூரம் போகணும் என் வங்கிக்கு, அதுவும் முடியாதாம்.

இது வேலைக்காகாதுன்னு, என் இன்னொரு நண்பரை அவர் அலுவலகத்திற்கு போய் காசு வாங்கி வந்து, அவருடைய காசோலையை என் வங்கிக் கணக்கில் போடச் செய்து... ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா... முடியலைடா.

***

அமெரிக்காவில் இருந்தவரை, இங்கிருந்து வந்து போகும்போது அல்லது தபாலில் தமிழ்ப் புத்தகங்களை வரவழைப்பேன். தபாலுக்கு டப்பு ஜாஸ்தியாயிடும். தவிர, புத்தகங்கள் சீக்கிரம் படிச்சி முடிச்சிட்டா அப்புறம் போர் அடிக்கும். அதனாலேயே, கொஞ்சம் கொஞ்சமா படிச்சி நாள் கடத்துவேன். இப்போதான் இங்கேயே வந்தாச்சேன்னு வாங்கி படிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சு.

குட்மார்னிங் டு குட்நைட் எல்லாத்தையும் டிவிட்டரில் சொல்வதால், இப்படி படிக்கும் புத்தகங்களைப் பற்றியும் நம் அரும்பெரும் கருத்துகளை கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இயம்பலேன்னா அவங்க கஷ்டப்படுவாங்க.

அதனால், http://sathyatv426.posterous.com ஒரு பக்கம் உருவாக்கிட்டேன். ஒரு சின்ன டிவிட்லாங்கர் அளவுக்குத்தான் பதிவுகள் இருக்கும்.

லிங்க்களை வழக்கம்போல் டிவிட்டரில் தர்றேன். இப்போதைக்கு முதல் புத்தக கருத்து : http://sathyatv426.posterous.com/139837098

***

Read more...

Tuesday, May 22, 2012

உட்காருங்க. உட்காருங்க.

முக்கிய டிஸ்கி: வழக்கம்போல் லேபிளை முதலில் படித்து விடவும். பின்னர் வருத்தப்படக் கூடாது.

அடடே. வாங்க வாங்க.

வந்துட்டேன். நலமா?

நலமே. நீங்க?

நானும் நலமே.

உட்காருங்க.

இல்லே முதல்லே நீங்க உட்காருங்க.

ம்ஹூம். நீங்கதான் முதல்லே உட்காரணும்.

அட சொல்ற பேச்சை கேளுங்க. மரியாதையா உட்காருங்க.

என்னங்க. நீங்க பெரியவங்க. நீங்கதான் முதல்லே உட்காரணும்.

எனக்கு வேலை வாங்கித் தந்த தெய்வம் நீங்க. நீங்கதான் முதல்லே உட்காரணும்.

வேலை சரி. எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து என் வாழ்க்கையை மங்களகரமா துவக்கி வெச்ச நீங்கதான் முதல்லே உட்காரணும்.

இது சரிப்படாது. இப்ப உட்காரறீங்களா இல்லையா?

முடியாதுங்க. நீங்கதான் முதலில்.

இத பார்றா. சொன்னா கேளு.

டேய் @#, நீ கேளுடா மொதல்லே.

டேய் வெண்ணை, முன்னாடி இருந்த வேலையில் நான் நிம்மதியா இருந்தேண்டா. நீ வாங்கிக் குடுத்தே பாரு ஒரு வேலை, @#$ என் நிம்மதியே போச்சு. இவ்வளவும் பண்ணிட்டு இங்கே உட்காரவும் மாட்டேன்னா என்னடா அர்த்தம்?

வெளக்கெண்ணை, சிவனேன்னு தனியா இருந்த எனக்கு ஒரு பொண்ணை.. பொண்ணா அவ... கட்டி வெச்சியே, என்ன பாடு படுத்தறா தெரியுமா? அன்னிலேர்ந்தே நீ என்னிக்கு என்கிட்டே மாட்டுவேன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்போ இங்கே வந்து உட்காரவும் மாட்டேன்னு வம்பு பண்றே?

சரி சரி விடுங்க. சமாதானமா போயிடுவோம்.

ஆமா. நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். மன்னிச்சிடுங்க.

சே. ச்சே. இதென்ன பெரிய பெரிய வார்த்தையா சொல்லிக்கிட்டு.

சரி. உட்காருங்க.

ம்ஹூம். நீங்கதான் முதல்லே உட்காரணும்.

***

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP