Friday, July 17, 2009

நொறுக்ஸ் - சென்னையில் முதல் வாரம்!!!

ஊருக்கு வந்த இரண்டாம் நாள் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் சஹானா கேட்ட முதல் கேள்வி -- கடைசியில் இருக்கு.

*****


சென்னை நகரம் ஒரு பெரிய்ய்ய வீடியோ கேம்!!!

பைக் மட்டுமில்லே, கார் ஓட்டுறவங்களும் வீடியோ கேம்லே வண்டி ஓட்டறா மாதிரி வளைச்சி வளைச்சி வேகமா ஓட்றாங்க. சைதாப்பேட்டையிலிருந்து ராஜ் பவன் போற சாலையில் ஐந்தாறு லேன்கள் இருக்குன்னு நினைக்குறேன். ஒரு குட்டி கார் சாலையில் வலது பக்கத்திலேந்து சர்ர்ருன்னு இடது பக்கம் வரைக்கும் போய் மறுபடி இந்த பக்கம் வந்து... எங்க கண்லேந்து மறைஞ்சியே போயிடுச்சு. பல பேரு அந்த மாதிரிதான் ஓட்றாங்க.

நீங்க எங்கேயாவது பராக்கு பாத்துக்கிட்டே போவீங்க. எவனாவது வந்து இடிச்சிடுவான். அதனால் இருக்கற ஒரு மாசத்துக்கு பைக்கே எடுக்காதீங்கன்னு சொல்லிட்டாங்க தங்ஸ்.

*****


அப்போ நாந்தான் லூஸா!!!

இன்னொரு சமயம் போயிட்டிருக்கும்போது, பக்கத்துலேந்து அடிக்கடி ஒரு அக்கா எங்க ஆட்டோக்குள்ளே குதிக்க முயற்சி செய்துக்கிட்டிருந்தாங்க. என்னன்னு பாத்தா, அவங்க ஒரு பைக் பின்னாடி உக்காந்து போறாங்க. அந்த பைக் எங்க ஆட்டோவோட தோளோடு தோள் உரசிக்கிட்டு வருது. இந்த அக்காவும் எங்க ஆட்டோக்குள்ளே எட்டிப் பாத்து சினேகமா சிரிக்கிறாங்க, மணி கேக்குறாங்க, பாப்பா அழகா இருக்குன்னு சொல்றாங்க.

அவங்க பாதை மாறிப் போறதுக்கு முன்னாடி சொன்ன அந்த கடைசி வார்த்தைகள் மூலமாதான் நான் ரொம்ப நேரம் தனியா பேசிட்டிருந்தேன்னு புரிஞ்சுது...

அவங்க சொன்னது - “சரி நேர்லே பேசுவோம். வெச்சிரட்டா...”

*****


போன வாரம் ஒரு மினி பதிவர் நண்பர்கள் சந்திப்பு நடத்தி முடிச்ச கையோட இந்த வாரயிறுதியில் கோவை நண்பர்களை சந்திக்கப் போறேன்.

அடுத்த வாரயிறுதி (25,26) சொந்த வேலையா வெளியூர் போறதால், சென்னை நண்பர்கள் ஆகஸ்ட் 1,2 தேதிகள்லே ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணீங்கன்னா எல்லாரையும் பாக்க வசதியாயிருக்கும்.

*****


அனானிகளுக்கு ஆபீஸ்லே ஆணி அதிகமாகணும் ஆண்டவா. அப்பத்தான் அவங்க ஆட்டம் அடங்கும். அனைவருக்கும் அடிப்பதற்கு அருமையான அடுகைகள் அடிக்கும்

(ஹிஹி... எல்லாம் அ, ஆ-லேயே ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். முடியல. அதனால் வேணும்னே சில ஸ்பெல்லிங் மிஷ்டேக் பண்ணிட்டேன்... டென்சனாகாதீங்க!!!!).

*****


இந்த வண்டியில் ஏன் சீட் பெல்ட் இல்லே? - இதுதான் அந்த கேள்வி... அவ்வ்வ்வ்... முடியல....

*****

Read more...

Wednesday, July 8, 2009

இரவுக் கிறுக்கல்கள்!!!

கொடியில் காய்கிற
சட்டையைவிட அதிகமாய்
பறக்கிறது சுடிதார்..

சிவன் பார்வதி
இருக்கும் காலண்டரில்
பார்வதி சிவனை
தன்பக்கம் இழுத்துக்கொண்டே
பறக்கிறார் காற்றில்..

ங்கொய்யாலே...
இதிலுமாடா
பெண்ணாதிக்கம்?!?!?!


**********


போலீஸ்காரர்கள் தொல்லை
இல்லாத இந்த
நேரத்திலும் ஏன்
இந்த ஒழுங்கு?

சுவரோரம் வரிசையாக
செல்லும் எறும்புகள்..


**********


திருமணமான ஆடவர்களுக்கு
கடவுள் கொடுத்த மாபெரும் பரிசு -- இரவு நேரம்!!

அப்போதானே மனைவிகள்
‘அமைதியாக’ தூங்குறாங்க...


******


மொதல்லே இந்த
ஆளை கால்செண்டர்
வேலை விடச் சொல்லணும்..

இவ்ளோ நேரமா
வீட்டுக்கு வர்றதுக்கு?

-- கணவனுக்குக் காத்திருக்கும் பல்லி...


*******



வீட்டின் எல்லாக்
கதவுகளும், ஜன்னல்களும்
சாத்தியிருந்தாலும்
உள்ளேயிருந்து
என்னால் உலகத்தை
பார்க்கமுடிகிறது - இணையம்..


***********


எந்த ப்ளேன்லே வந்தாலும் ஏன் அதை ‘ஜெட்’ லாக்னு (jetlag) சொல்றாங்கன்னு தெரியல. ஞாயமா எனக்கு வந்திருக்கிறது கத்தார் லாக்தான். அப்படிப்பட்ட கத்தார் லாக் (!!)
முடியாமல் இரவில் தன்னந்தனியாக முழித்திருக்கும்போது கிறுக்கியவை!!!

டோண்டு ஐயா பாணியில் சொல்வதானால் - இவ்விடுகை எழுதத் துவங்கியபோது மணி காலை 2.00. முடியும்போது 3.30. 8.00 மணிக்கு பப்ளிஷ் செய்ய போட்டிருக்கிறேன்...

******

Read more...

Friday, July 3, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு... சென்னை...


"எங்கே போனாலும் வீட்லேந்து சுடு செய்து ஆறிய தண்ணியை எடுத்துப் போங்க. வெளியில் எங்கேயும் தண்ணி வாங்கிக் குடிக்காதீங்க. வெளியே எங்கேயும் சாப்பிடாதீங்க. அதிகமா சாப்பிட்டு வெயிட் போட்டுடாதீங்க".



"அவ்வ்.. டாக்டர், நான் பொறந்து 30 வருஷம் வளர்ந்த ஊருக்குப் போறதுக்கு இவ்ளோ பயமுறுத்தறீங்களே. விட்டா சாப்பிடவே சாப்பிடாதேன்னு சொல்வீங்க போலிருக்கே?"



"இப்போ ஊரெல்லாம் ஜுர பயமாயிருக்கு. அங்கே கொசுத்தொல்லை வேறே. அதனால்தான் இவ்வளவு எச்சரிக்கையா இருங்கன்னு சொல்ல வேண்டியிருக்கு."



"தண்ணியெல்லாம் கொண்டு போய் குடிச்சேன்னா.. மக்கள் ஓட்ட ஆரம்பிச்சிடுவாங்களே?"



"யார் ஓட்டினாலும் பரவாயில்லை. நீங்க கண்டுக்காதீங்க. எவ்ளோ நாளுக்கு, எந்த ஊருக்குப் போறீங்க?"



"அஞ்சு வாரத்துக்கு. சென்னைக்கு. முதல்லே மெட்றாஸ்னு சொல்வாங்க. எதிர்காலத்துலே என்ன சொல்வாங்கன்னு தெரியாது".



"என்னிக்கு கிளம்புறீங்க?"



"இங்கேந்து சனிக்கிழமை இரவு கிளம்பி, இந்திய நேரப்படி திங்கள் காலையில் 4 மணிக்கு சென்னையில் இறங்கறோம்".



"எவ்ளோ நாள் கழிச்சி இந்தியா போறீங்க?"



"ரெண்டு வருஷம் பதினோரு மாசம் ஆயிடுச்சு கடைசியா போயி".



"அதிகமா ஊர் சுத்தாதீங்க. வெயில் ரொம்ப ஜாஸ்தியாயிருக்கும். நிறைய தண்ணி குடிங்க".



"டாக்டர், மறுபடி முதல்லேந்து ஆரம்பிச்சிடாதீங்க. நான் கிளம்பறேன்".



"ஊர்லே எல்லாம் ரொம்ப ஆவலா எதிர்பாப்பாங்களே?"



"இல்லையா பின்னே. இப்ப இணையத்துலே வேறே நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. அவங்களையும் நான் பாக்கணும். I am excited.".



"தொலைபேசி எண் எல்லாருக்கும் கொடுத்துட்டீங்களே ஏற்கனவே?"



"ஆமா. 96001 - 97410 இதை எல்லாருக்கும் கொடுத்துட்டேன். திங்கள் காலையில் 6 மணியிலேந்து மக்கள் இதில் தொலைபேசலாம்னும் சொல்லிட்டேன். என்ன, யாரும் தொலைபேசி, இந்த படத்துலேந்து இந்த பாட்டு போடுங்கன்னு சொல்லக்கூடாது, அவ்ளோதான்".



"சரி. நல்லபடியா போயிட்டு வாங்க. இந்த ஒரே ஒரு ஊசி மட்டும் போட்டுக்கிடுங்க. இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்".



"ஆஆஆஆஆ..."



*****

Read more...

Monday, June 29, 2009

விருந்தினர்கள் - உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக

அன்றிலிருந்து 7 நாட்கள் முன்பு:

"ஏங்க, வெளிநாட்டிலேந்து என் கசின் குடும்பத்தோட லீவுலே வந்திருக்கா. நம்ம வீட்டுக்கும் அவங்களை சாப்பிட கூப்பிட்டிருக்கேன். அவங்க பெரிய்ய பணக்காரங்க. நம்மைப் பத்தி மட்டமா நினைச்சிக்கக் கூடாது. அதனால் என்ன பண்றோம்னா, நம்ம வீட்லே சில மாற்றங்களை பண்றோம். அவங்களை இம்ப்ரஸ் பண்றோம்".

"நாம நாமா இருக்கறவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லே. எதுக்கு இந்த வெட்டி பந்தால்லாம்?"

"அதெல்லாம் கிடையாது. நான் எல்லாத்தையும் ப்ளான் பண்றேன். நீங்க வெறும் பணம் கொடுத்தா போதும். அவ வந்து போறவரைக்கும் வாயை மூடிக்கிட்டு சும்மா இருங்க பாப்போம்."

அன்றிலிருந்து 6 நாட்கள் முன்பு:

"ஹால் நடுவிலே இருக்கிற இந்த டிவியை உள்ளே எங்கேயாவது மாத்திடலாம்."

"ஏம்மா? டிவிக்கு என்ன ஆச்சு?"

"நாம எப்பவுமே டிவியே பாத்துக்கிட்டு உக்காந்திருப்போம்னு அவங்க தப்பா நம்மைப் பத்தி நினைச்சிடக் கூடாதில்லையா. அதனால்தான். டிவிக்குப் பதிலா அந்த இடத்தில் ஒரு மீன் தொட்டி வெச்சி, நிறைய மீன்களை வாங்கி விடலாம். எப்படி ஐடியா?"

"ஏம்மா. அது நிஜம்தானே. நீதான் நாள் முழுக்க உக்காந்து சீரியல் பாக்கிறியே. அது தவிர, இது என்ன அக்வேரியமா, மீன் தொட்டிய நடுவிலே வெச்சி, எல்லாரும் சுத்தி உக்காந்து வேடிக்கை பாக்க?"

"அது சரி. எப்படா என்னை திட்டலாம்னு இருங்க. மீன் தொட்டி வாங்க இன்னிக்கு போறோம்."

அன்றிலிருந்து 5 நாட்கள் முன்பு:

"இந்த சோஃபா அங்கங்கே கிழிஞ்சி அசிங்கமா இருக்கு. இன்னிக்கே போய் புதுசா ஒரு சோஃபா வாங்கறோம். கூடவே இந்த டைனிங் டேபிளும். அவங்க வந்தா, நாம எல்லாரும் ஒரே சமயத்திலே உக்காந்து சாப்பிட வேணாமா?"

"ஏம்மா.. சோஃபாக்கு ஒரு உறை மட்டும் வாங்கிப் போட்டோம்னா போதும். அவங்க ஒரே ஒரு வேளை சாப்பிட வர்றாங்க. ரெண்டு மூணு மணி நேரங்கள் மட்டுமே இங்கே இருக்கப் போறாங்க. அதுக்கு எதுக்கு புது டைனிங் டேபிள்? எவ்ளோ செலவாகும்னு யோசிச்சி பாத்தியா?"

"செலவானா பரவாயில்லை. நாளைக்கு அவ நம்ம வீட்டைப் பத்தி மத்தவங்ககிட்டே நல்லபடியா சொல்ல வேணாமா? எனக்கு அதுதான் முக்கியம்."

அன்றிலிருந்து 4 நாட்கள் முன்பு:

"அவ புருஷன் சைவமாம்."

"ஏம்மா, இருக்கிற பிரச்சினை போதாதுன்னு ஜாதி, மத பிரச்சினை வேறே கொண்டு வரப்போறியா? எனக்கென்னவோ பயமாயிருக்கு."

"ஐயோ.. அதில்லே... அவர் அசைவம் சாப்பிட மாட்டாராம். அதனால், நான் வெஜ்-பிரியாணியில் ஆரம்பிச்சி, நிறைய ஐட்டங்கள் பண்ணனும். "

"இதோ பாரும்மா. வெளிநாட்டுலேந்து வர்றவங்க நிறையல்லாம் சாப்பிட மாட்டாங்க. டயட், டயட்ன்னு இருப்பாங்க. நீ பாட்டுக்கு எக்கச்சக்கமா சமைச்சி எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணாதே. "

"சும்மா உளறாதீங்க. நம்ம வீட்டுக்கு வந்தவங்களுக்கு வயிறார சாப்பாடு போடவேணாமா. அதனால் விதவிதமா பண்ணித்தான் ஆகணும். நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க. நான் சாப்பாட்டு மெனுவை யோசிக்கணும்."

அன்றிலிருந்து 3 நாட்கள் முன்பு:

"ஏங்க.. என்கிட்டே இருக்குற புடவையெல்லாமே ரொம்ப பழசாயிடுச்சு. இந்த சமயத்துலே இவங்க வேறே வர்றாங்க. அதனால் சாயங்காலம் கடைக்குப் போய் எனக்கு புதுசா ரெண்டு மூணு புடவை வாங்கறோம். நீங்களும் ஜல்லடை மாதிரி பனியன் போட்டுட்டு அவங்க முன்னாடி உக்காராதீங்க. புதுசா பனியன் சட்டை வாங்கிக்குங்க."

அன்றிலிருந்து 2 நாட்கள் முன்பு:

"இதோ பாருங்க. அவங்க எதிரே உம்மணாமூஞ்சி மாதிரி உக்காந்திருக்காதீங்க. ஏதாவது ஜோக்கு புத்தகங்களை வாங்கி படிச்சி, நாலைஞ்சி நல்ல ஜோக்குகளை தெரிஞ்சி வெச்சிக்கிட்டு, அப்பப்ப எடுத்து விடுங்க."

அன்று:

"ஹலோ... ஹேய் எப்படிம்மா இருக்கே.. சரி சரி.... எப்போ வர்றீங்க... உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம். என்ன? அப்படியா? ஓ... சரி சரி... நோ ப்ராப்ளம்... ஆனா, அடுத்த தடவை ஊருக்கு வரும்போது முதல்லே எங்க வீட்டுக்குத்தான் வரணும்".

அன்றிலிருந்து 10 நாட்கள் கழித்து:

சொல்லச் சொல்ல கேட்காமே, ஏகப்பட்ட செலவுகள் பண்ணி, சமையலும் பண்ணி - கடைசியில் அன்னிக்கு அவ சொந்தக்காரங்க வீட்டுக்கு வரவேயில்லை.

இவளோட வெட்டி பந்தாவாலே இப்ப பத்து நாளா நான் பழைய்ய்ய்ய்ய சாதத்தை சாப்பிடுட்டு இருக்கேன். தினமும் ஆபீஸுக்கும் ஒரே புளியோதரையே எடுத்துட்டுப் போறதாலே, இப்ப எல்லாரும் என்னை - புளியோதரை சுரேஷ்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

அதனால் மக்களா - யார் வீட்டுக்காவது சாப்பிட வர்றேன்னு சொன்னீங்கன்னா, தலையே போனாலும் பரவாயில்லை, போய் மரியாதையா சாப்பிட்டு வந்துடுங்க. இல்லேன்னா, அந்த வீட்டுலே எப்படி கஷ்டப்படுவாங்கன்னு என்னைப் பாத்து தெரிஞ்சிக்கோங்க...

ஐயயோ.. இவ வர்ற சத்தம் கேக்குது. அதுக்குள்ளே இந்த டைரியை மறைச்சி வெச்....

*****

உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதிய சிறுகதை. போட்டியின் விவரங்கள் இங்கே இருக்கு.

Read more...

Thursday, June 25, 2009

நொறுக்ஸ் - வியாழன் - 6/25/09

போன வாரம் ஒரு நாள் எங்க ஊர் மாலில் சஹானாவை விளையாட விட்டுட்டு, சும்மா வேடிக்கை பாத்துட்டு உக்காந்திருந்தோம். திடீரென்று பின்னாலிருந்து ஒரு ஆள் வந்து என்னைக் கட்டி பிடித்து உலுக்கினார். திடுக்கிட்டு திரும்பி பார்த்தால், அது எங்க அலுவலக மேனேஜர்களில் ஒருவர் - சீனர்.

சிறிது நேரம் பேசிப் போனபிறகு, தங்ஸ் என்னிடம் - அது யாருங்க? உங்களுக்கு கட்டிங் (முடி திருத்துபவர்) பண்றவரான்னாங்க.

நல்லவேளை அவருக்கு தமிழ் தெரியாது.. தெரிஞ்சிருந்தா, முடியை இல்லே, என் தலையையே எடுத்திருப்பாரு. முடியிழையிலே தப்பிச்சேன் அன்னிக்கு....

********

போன வருடம் கூட வேலை பார்க்கும் நண்பரிடம் விளையாட்டாக பேசிக்கொண்டிருந்தபோது, ஊதிய உயர்வு கிடைத்த விஷயத்தை சொன்னேன். அவரோ, நேராக எங்க தலயிடம் போய் - ஒருத்தருக்கு மட்டும் உயர்வு கொடுத்துட்டு மத்தவங்களுக்கெல்லாம் கொடுக்காமே விட்டுட்டீங்களே? - அப்படின்னுட்டாரு.

நானும் ஒரு வருடமாக அந்த தலயை பார்த்தும் பார்க்காமலும் ஓடிக் கொண்டிருந்தபோது, இப்போ அவர் பக்கத்திலேயே எனக்கும் சீட் போட்டு உக்கார வெச்சிட்டாங்க.

உன் சம்பளத்தை எப்படி மத்தவங்ககிட்டே பகிர்ந்துக்கலாம்னு அவரும் கேட்டுடப்போறாருன்னு நான் பயந்து கொண்டிருக்க, அவரோ அதைப் பத்தி மட்டும் பேசாமல் மத்த விஷயங்களைப் பத்தியே பேசறாரு.

கேள்வி கேட்டு பதில் வாங்கறதை விட, கேள்வி கேக்காமலேயே தவிக்க விடுறதுன்றது நல்ல டெக்னிக்தான் - இது நாம எந்த பக்கத்தில் இருக்கோம்றத பொறுத்து... என்ன சொல்றீங்க?

********

ரொம்ப டென்சனா இருக்கும்போதெல்லாம், யூட்யூபில் சார்லி சாப்ளின் படங்களைப் பார்ப்பது வழக்கம். அப்படி பார்க்கும்போது, 1977ல் அவருக்கு கௌரவ ஆஸ்கர் பட்டம் வழங்கிய இந்த வீடியோவை பார்த்தேன். நிறைய பேர் ஏற்கனவே பார்த்திருப்பீங்க. பாக்காதவங்க ஒரு தடவை பாத்துடுங்க.

http://www.youtube.com/watch?v=J3Pl-qvA1X8

(யூட்யூப் வீடியோவை இங்கே இணைக்க முடியல... அதனால் உரலைப் பிடிச்சி அங்கேயே போய் பாத்துடுங்க!).

கிட்டத்தட்ட நூறு வருஷமா கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சார்லிக்கு, அரங்கிலிருப்பவர்கள் ஒரு ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக கைத்தட்டி உற்சாகப் படுத்துவதும், அதுக்கு அவர் காட்டும் பாவனைகளும், யாரையும் மெய் மறந்து உணர்ச்சி வசப்படுத்தும்.

எப்படி என் தந்தை எனக்கு சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி இவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாரோ, அதே மாதிரி நானும் சஹானாவுக்கு இப்போது சார்லியை அறிமுகப் படுத்தியிருக்கிறேன். நகைச்சுவை உணர்வு இல்லாமல் யாராவது உயிர் வாழ முடியுமா என்ன?

வாழ்க சார்லி சாப்ளின்...

*******

இன்னும் ரெண்டு மூணு இடுகைகள் போட்டா, பூச்சாண்டியின் ஹிட்ஸ் 1 லட்சத்தை தொட்டு விடும்னு தங்ஸிடம் சொன்னேன்.

அவங்கதான் ஏதாவது முக்கிய நாள், milestone இப்படியெல்லாம் வராதா, ஏதாவது நகைகள் வாங்க மாட்டோமான்னு காத்திருக்காங்களே?. உங்க கிறுக்கல்களையும் லட்சம் தடவை யாரோ படிச்சிருக்காங்க. மரியாதையா எனக்கு ஒரு தங்க வளையல் வாங்கிக் கொடுத்துடுங்கன்னுட்டாங்க.

என்னம்மா, அவங்கவங்க அஞ்சு லட்சம், பத்து லட்சம்னு போயிட்டிருக்காங்க. நான் இப்பத்தான் - மாமா பிஸ்கோத்துன்ற மாதிரி முட்டிமோதி ஒரு லட்சம் வந்திருக்கேன். அதுக்கே இவ்ளோ செலவான்னு கேட்டாக்கா - காக்கைக்கும் தன் ஹிட்ஸ் பொன் ஹிட்ஸ்தானேன்றாங்க.

எனக்கு ஒரு லட்சம் வந்ததுக்கு சந்தோஷப்படறதா, இல்லே என்னை காக்கைன்னுட்டங்களேன்னு வருத்தப்படறதான்னு தெரியல.

*****

Read more...

Wednesday, June 24, 2009

பதவி உயர்வு - அரை பக்கக் கதை

"இங்கே பாருங்க சுரேஷ். இது ஒரு மென்பொருள் நிறுவனம். இங்கே தொழிற்சங்கமெல்லாம் கிடையாது. நீங்களும் சங்கத் தலைவர் மாதிரியெல்லாம் நடந்துக்காதீங்க".

"இது என்ன சார் அநியாயமா இருக்கு. கூட வேலை பாக்குறவங்களுக்காக குரல் கொடுத்தா தலைவர்னு சொல்லிடறதா? அப்படி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்? நம்ம குழுவில் இருக்கிற மாலா தன் திருமண நாளுக்காக லீவ் கேட்டப்போ, அதை நீங்க மறுத்துட்டீங்க. நானும் நம்ம வாராந்திர மீட்டிங்கில் எல்லார் எதிரிலேயும் அதை தட்டிக் கேட்டு - அவங்களுக்கு விடுப்பு வாங்கிக் கொடுத்தேன். அது தப்பா"?

"அந்த சமயத்தில் நம்ம ப்ராஜெக்ட் என்ன நிலைமையில் இருந்துதுன்னு உங்களுக்குத் தெரியும். டெலிவரி ரெண்டு நாள் தள்ளிப் போனாக்கூட, க்ளையண்ட் நம்மை குதறிடுவான்னும் உங்களுக்குத் தெரியும். அப்படி இருந்தும்கூட நீங்க அவங்களுக்காக பரிஞ்சு பேசினது நல்லாயில்லே".

"எனக்கு என் நண்பர்கள்தான் முக்கியம். அவங்களுக்காக நான் யாரை வேணா எதிர்த்துக் கேள்வி கேப்பேன். நீங்க என்னை தடுக்க முடியாது".

"சரி. அதைக்கூட மன்னிச்சி விட்டுடலாம். ஆனா நீங்களே அடிக்கடி சொல்லாமே மட்டம் போட்டுடறீங்க. அதுக்கு என்ன சொல்றீங்க"?

"இருக்கற லீவைத்தானே எடுக்கறேன்? அடுத்த நாள் வந்து எல்லா வேலைகளையும் விரைவா முடிச்சி கொடுத்திருக்கேனே"?

"உங்க வேலைத் திறமையை பார்த்து, உங்களையே இந்த ப்ராஜெக்டின் மேனேஜராக பதவி உயர்வு செய்யணும்னு இப்பத்தான் நம்ம கம்பெனி தலைவரை பாத்து சொல்லிட்டு வந்தேன். நீங்க என்னடான்னா, இப்படி பேசறீங்க"...

*****

"ஏம்மா மாலா. நாளைக்கு வெறும் உங்க பிறந்த நாள்தானே? நீங்க ஆஸ்பத்திரிக்குப் போய் மறுபடி ஒருதடவை பொறக்கப் போறதில்லையே? அப்புறம் எதுக்கு லீவ்? ஒரு மணி நேரம் பர்மிஷன் தர்றேன். கோயிலுக்கு போணும்னா போயிட்டு, நேரா ஆபீசுக்கு வந்துடுங்க. நிறைய வேலை இருக்கு".

மேனேஜர் சுரேஷின் காட்டுக் கத்தல், மூடப்பட்ட அவரது அறையிலிருந்து தெளிவாக கேட்கிறது.

*****

Read more...

Tuesday, June 23, 2009

கடையோட மாப்பிள்ளை - இறுதிப் பகுதி!!!

முன்குறிப்பு : ரொம்ப நாளாயிடுச்சு போன பகுதி போட்டு. அதனால, இந்த நாடகத்தை மறந்தவங்க, 'நாடகம் மாதிரி'ன்ற லேபிளை புடிச்சு - முன்னாடி போட்ட பகுதிகளை படிச்சிடுங்க.

******

மா.அப்பா: மாது, உங்கம்மா எப்போ கோயிலுக்கு வந்தாலும் அந்த மண்டபத்துலேதான் உக்காந்திருப்பா. வா. அங்கே போய் பாக்கலாம்... டேய். அங்கே பாரு அந்த தூணுக்குப் பக்கத்திலே... அது உங்க அம்மாதானே?

மாது : அப்பா. அது கோயில் தூண். அதுக்குப் பக்கத்துலே இருக்கறது கல் யானை. உனக்கு யானைக்கும் அம்மாவுக்கும் வித்தியாசமே தெரியல.

மா.அப்பா: டேய். யானை எந்த காலத்துலேடா புடவை கட்டிச்சு? அது உங்கம்மாவேதான்... வா போய் பக்கத்துலே பாக்கலாம்.

மாது : பக்கத்துலே நீ போய் பாத்துட்டு, அவங்க அம்மாவாயிருந்தா என்னைக் கூப்பிடு. அது அம்மாவா மட்டும் இல்லேன்னா, அவங்களே போலீஸைக் கூப்பிட்டு உன்னை ஈவ்டீஸிங்லே உள்ளே போட்டுடுவாங்க.

(பக்கத்தில் போகிறார்கள்)

மாது : அம்மா. என்னம்மா இங்கே வந்து உக்காந்திருக்கே. வா வீட்டுக்குப் போகலாம்.

மா.அம்மா : முடியாது. நீதான் ஜானகிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னியே. என்கூட பேசாதே.

மாது : நாந்தான் அப்புறமா ஓகே சொல்லிட்டேனே. இப்போ அவதானே என்னை வேணாம்னுட்டா. நியாயமா பாத்தா, அவங்கம்மாதான் ஓடிப்போயிருக்கணும். நீ தப்பா ஓடி வந்துட்டே.

மா.அம்மா : சரி. இப்ப கேக்கறேன். உனக்கு இந்த கல்யாணத்துலே இஷ்டமா? ஜானகியை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு.

மாது : என்னை வேணாம்னு சொன்னவ கிட்டே, எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு மறுபடி போய் கேப்பேன்?

மா.அம்மா : அதுக்காக எந்த மூஞ்சியையும் தேடவேண்டாம். இதே மூஞ்சியை வெச்சிக்கிட்டு கேட்டாலே போதும். கொஞ்சம் அந்தப்பக்கம் திரும்பிக்கிட்டு சத்தம் போட்டு - என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேளு. என்ன நடக்குதுன்னு பாரு.

மாது : அம்மா. இதுக்குதான் அதிகமா தொலைக்காட்சி பாக்காதேன்னு சொன்னேன். இப்ப பாரு. கிழக்கு பக்கம் பாத்து நில்லு. சத்தமா கத்தி பேசுன்னு தத்துப்பித்துன்னு உளர்றே. அப்பா. வீட்டுக்குப் போனவுடனே, அம்மாவை நல்ல டாக்டர்கிட்டே காட்டணும்.

மா.அம்மா : டாக்டர்லாம் வேணாம்டா. அம்மா சொல்றத கேளுடா மாது. தயவு செஞ்சி ஒரு தடவை நான் சொன்னதை கத்தி சொல்லு.

மாது : சரி. கல்யாணம் ஆறவரைக்கும் எல்லா ஆம்பளைகளும் அம்மா சொல்றத கேட்டுத்தானே நடக்கறாங்க.

மா.அம்மா : டேய். அப்போ கல்யாணம் ஆனப்பிறகு என் பேச்சை கேக்கமாட்டியா?

மாது : என்னம்மா இப்படி சொல்லிட்டே.. உன் பேச்சை கேக்காமே என்னாலே இருக்க முடியுமா?

மா.அம்மா : அதானே பாத்தேன்.

மாது : ஆனா - உன் பேச்சைக் கேக்கறதுக்கு முன்னாடி - அப்படி கேக்கலாமான்னு ஜானகிகிட்டே ஒரு வார்த்தை கேட்டுடுவேன்.

மா.அம்மா : சரி என்னமோ பண்ணித் தொலை. இப்போதைக்கு நான் சொன்னதை சொல்லப்போறியா இல்லையா?

மாது : ஐயயோ சொல்லிடறேம்மா.. அப்போ வீட்டை விட்டுட்டு ஓடினமாதிரி இப்போ கோயிலை விட்டுட்டு ஓடிடாதே. என்னாலே கோயில் கோயிலா ஒவ்வொரு தூணுக்குப் பின்னாடியும் உன்னை தேடமுடியாது. பாக்கறவங்கல்லாம் இப்பவே என்னை தப்பா நினைக்கறாங்க.

மா.அம்மா : இதுதான் உனக்கு லாஸ்ட் சான்ஸ்டா மாது...

மாது : சரி சரி... என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ஜானகி...

ஜானகி: கண்டிப்பா பண்ணிக்கிறேன் அத்தான்...

(ஜானகி பக்கத்து தூண் மறைவிலிருந்து வெளியே வருகிறார்).

மாது : அட... நீயும்.. நீங்களும்... இங்கேதான் இருந்தீங்களா? எனக்கு அப்பவே சந்தேகம் வந்துச்சு. அம்மா இப்படி கத்தல்லாம் சொல்ல மாட்டாங்களேன்னு.

ஜானகி: பரவாயில்லை. என்னை நீங்க நீன்னே கூப்பிடலாம். இதெல்லாம் உங்க அம்மாவோட ப்ளான் தான். என்னை சம்மதிக்க வெச்சதும் அவங்கதான்.

மாது : சரி. இன்னும் 20 - 30 தூண் இருக்கே. யாரெல்லாம் ஒளிஞ்சிருக்காங்க. எல்லாரையும் ஒரே தடவையில் வெளியே வந்துடச் சொல்லும்மா. என்னாலே திரும்பத் திரும்ப கத்த முடியாது.

மா.அம்மா : அவ்ளோ பேரெல்லாம் கிடையாதுடா. எல்லாம் ஜானகியோட அப்பா, அம்மா அப்புறம் நம்ம ஜோசியர் அவ்ளோதான்.

(எல்லோரும் வெளியே வருகின்றனர்).

மாது : அப்படா இவ்ளோ பேர்தானா? நான் கூட இந்த வாத்தியக்காரங்க, கல்யாணம் பண்ணி வைக்கிற ஐயரு இப்படி எல்லாரும் ஒளிஞ்சிருந்திருப்பாங்கன்னு நினைச்சேன்.

ஜா.அப்பா: மாப்ளே, இப்ப சொல்லுங்க. ஜானகிய கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதம்தானே?

ஜானகி: அப்பா, மறுபடி மறுபடி அவரை தொந்தரவு பண்ணாதீங்க. அவர்தான் அப்பவே சரி சொல்லிட்டாரே. ஒரு நல்ல முஹூர்த்தம் பாருங்க. சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடலாம்.

ஜா.அப்பா: இரும்மா. இன்னும் அந்த கண்டிஷனுக்கு மாப்பிள்ளை ஓகே சொல்லவேயில்லையே?

மாது : அது என்ன கண்டிஷன்?

ஜா.அப்பா: கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதமா மாதுவுக்கு?

மாது : இது என்ன புது கண்டிஷன்? இதுக்கெல்லாம் என்னாலே ஒத்துக்க முடியாது.

மா.அம்மா : மாது.. என்னடா இப்படி சொல்லிட்டே?

மாது : அம்மா. வீட்டோட மாப்பிள்ளையால்லாம் என்னாலே இருக்க முடியாது. வேணும்னா...

மா.அம்மா : வேணும்னா..

மாது : கடையோட மாப்பிள்ளையா இருந்துட்டு போறேன்.

ஹாஹாஹா...

(அனைவரும் சிரித்துக் கொண்டே கடவுளை வேண்டுவதற்கு கோயிலுக்குள் போகின்றனர்).

*******சுபம்*************

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP